ஆந்திர பிரதேசத்தின் ஸ்ரீகாகுளம் மாவட்டம், பண்டபள்ளி பெண்கள் பழங்குடியினர் ஆசிரம பள்ளியில் நடந்த அதிர்ச்சி சம்பவம் வெளியாகியுள்ளது. ஆசிரியை ஒருவர் நாற்காலியில் அமர்ந்து தொலைபேசியில் பேசிக்கொண்டிருக்க, பள்ளி சிறுமிகள் இருவர் அவரது கால்களுக்கு மசாஜ் செய்யும் காணொளி சமூக வலைதளங்களில் வைரலானது.
இதையடுத்து, ஒருங்கிணைந்த பழங்குடியினர் மேம்பாட்டு முகமையின் அதிகாரி உடனடியாக விசாரணைக்கு உத்தரவிட்டார். முழங்கால் வலி காரணமாக மாணவர்கள் உதவியதாக ஆசிரியை விளக்கம் அளித்தபோதிலும், புதிய காணொளி வெளியானதால், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விசாரணை முடியும் வரை ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
முன்னதாக, கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் ஓர் ஆசிரியை மாணவர்களை தன் கார் கழுவவும், தனிப்பட்ட வேலைகளை செய்யவும் கட்டாயப்படுத்தியதற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மாணவர்களிடம் இத்தகைய வேலைகளை வாங்குவது கல்வி உரிமை விதிமுறைகளை மீறுவதாகும் என்று கல்வித்துறை தெரிவித்துள்ளது.