உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள காசிபூர் நகரில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில், வீட்டு பாடத்தைச் செய்யாததால், மாணவன் ஒருவன் தனது ஆசிரியரை துப்பாக்கியால் சுட்டுள்ளான். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
9-ஆம் வகுப்பு படிக்கும் அந்த மாணவன், தனது இயற்பியல் ஆசிரியர் கேட்ட கேள்விகளுக்கு சரியாகப் பதிலளிக்காததாலும், வீட்டுப் பாடம் செய்யாததாலும் ஆசிரியரால் தாக்கப்பட்டதாக தெரிகிறது. இதனால் கோபமடைந்த மாணவன், ஆசிரியரை பழிவாங்க முடிவு செய்து, வகுப்பறை முடிந்து ஆசிரியர் சென்றபோது, மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் அவரை சுட்டான். தோள்பட்டையில் குண்டு பாய்ந்த ஆசிரியர், உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சம்பவம் நடந்த இடத்திலிருந்து தப்பி ஓடிய மாணவனை பின்னர் காவல்துறையினர் கைது செய்து விசாரித்தபோது, ஆசிரியர் தன்னை அடித்ததால் பழிவாங்கும் நோக்கத்தில் சுட்டதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளான்.