மத்திய பிரதேசத்தில் 26 வயது ஆசிரியையை 18 வயது மாணவர் காதலித்துள்ளார். ஆனால், அந்த ஆசிரியை மாணவருக்கு அறிவுரை கூறி, படிப்பில் கவனம் செலுத்தும்படி கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாணவர், பழிவாங்கும் நோக்கில் ஆசிரியை மீது பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சூர்யான்ஷ் கோச்சார் என்ற 18 வயது மாணவர், தான் படித்த பள்ளியில் பணியாற்றிய ஆசிரியையை காதலித்துள்ளார். ஆனால், அந்த ஆசிரியை அவரது காதலை நிராகரித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாணவர், ஆசிரியை மீது பெட்ரோல் ஊற்றிவிட்டுத் தீ வைக்க முயற்சித்துள்ளார்.
இருப்பினும், ஆசிரியை சுதாரித்துக்கொண்டதால் அதிகத் தீக்காயங்கள் ஏற்படவில்லை. மேலும், அருகில் இருந்தவர்களும் அவரை காப்பாற்றினர். இதையடுத்து, காயமடைந்த ஆசிரியை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், மாணவர் சூர்யான்ஷ் கோச்சாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.