டெல்லியின் பவானா பகுதியில் இன்று காலை நடந்த துயர சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இன்று காலை நடைப்பயிற்சிக்கு சென்ற 43 வயது மதிக்கத்தக்க ஒருவர் சுட்டு கொல்லப்பட்டார். அவருடன் சென்ற அவரது மகளும் தாக்குதலில் காயமடைந்தார். இந்த கொலை, ரவுடி கும்பல்களுக்கு இடையேயான மோதல் காரணமாக நடந்திருக்கலாம் என காவல்துறை சந்தேகிக்கிறது.
உயிரிழந்தவர் தீபக் என அடையாளம் காணப்பட்டுள்ளார். முதல்கட்ட விசாரணையில் தீபக் தனது மகளுடன் வழக்கம் போல் காலை நடைப்பயிற்சிக்கு சென்றிருந்தார். அப்போது, அடையாளம் தெரியாத இருவர் மோட்டார் சைக்கிளில் வந்து அவர்களை திடீரென தாக்கியுள்ளனர்.
நேரில் கண்ட சாட்சிகள், தீபக் மீது பல குண்டுகள் பாய்ந்ததாகவும், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் தெரிவித்தனர். அவரது மகளின் கையிலும் துப்பாக்கி குண்டு காயம் ஏற்பட்டது. உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், தற்போது ஆபத்தான கட்டத்தை தாண்டிவிட்டார் என மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும், காவல்துறை உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து, அப்பகுதியை சுற்றி வளைத்து விசாரணையை தொடங்கியது. முதற்கட்ட விசாரணையில், இச்சம்பவம் ரவுடி கும்பல் மோதலின் விளைவாக இருக்கலாம் என தெரிய வந்துள்ளது. கொல்லப்பட்ட தீபக், பிரபல ரவுடி மன்ஜீத் மகலின் மருமகன் என கூறப்படுகிறது. எனவே, கபில் சங்வான் கும்பலை சேர்ந்தவர்கள் இந்த கொலையை செய்திருக்கலாம் என காவல்துறை கருதுகிறது.