ஃபரிதாபாத்தின் நவீன் நகரில் கணவரின் குடும்பத்தினரால் கொல்லப்பட்டு, வீட்டிற்கு வெளியே ஒரு குழியில் புதைக்கப்பட்டதாக கூறப்பட்ட தனு என்ற பெண்ணின் கொலை வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கில் மாமியாரை போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும் இந்த வழக்கில் கிடைத்த புதிய ஆதாரங்கள், மாமனார் பாலியல் பலாத்காரம் செய்து கொன்றதையும், மாமியார் குற்றத்தில் உடந்தையாக இருந்ததையும் வெளிப்படுத்தியுள்ளன. தலைமறைவாக உள்ள கணவர் அருண் என்பவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
தனு என்ற பெண் ஏப்ரல் 21 ஆம் தேதியே அவரது மாமனாரால் கொல்லப்பட்டு குழியில் புதைக்கப்பட்ட நிலையில் இந்த உண்மை ஜூன் 20 அன்று தனுவின் உடல் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் தெரியவந்தது. மாமனார் பூப் சிங், கழிவுநீர் வடிகால் எனக்கூறி ஏப்ரல் 20 அன்று குழி தோண்டியுள்ளார். ஏப்ரல் 22-க்குள் குழி மூடப்பட்ட நிலையில், இரண்டு நாட்கள் கழித்து, தனு காணாமல் போனதாக அண்டை வீட்டாருக்கும், காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளார். தனுவின் குடும்பத்தினர் சந்தேகம் அடைந்து புகார் அளித்தும், இரண்டு மாதங்களாக போலீஸ் நடவடிக்கை எடுக்கவில்லை. இறுதியில், டிசிபி உஷா குண்டுவின் உத்தரவின் பேரில், குழி தோண்டப்பட்டு தனுவின் சிதைந்த உடல் கண்டெடுக்கப்பட்டது.
முதலில் தனுவின் மாமனார் பூப் சிங் மட்டுமே கைது செய்யப்பட்டார். ஆனால், குடும்பத்தினர் வற்புறுத்தியதால், வழக்கு டிஎல்எஃப் குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட்டது. குற்றப் பிரிவு விசாரணையில், தனுவின் மாமியார் சோனியா மற்றும் கணவர் அருண் ஆகிய இருவரும் திட்டமிட்ட இந்த கொலையில் ஈடுபட்டுள்ளது அம்பலமானது.
ஏப்ரல் 21 இரவு, அருண், தனுவுக்கும் அவரது மைத்துனிக்கும் தூக்க மாத்திரைகளை கொடுத்துள்ளார். பின்னர், பூப் சிங் தனுவை பாலியல் பலாத்காரம் செய்து, துப்பட்டாவால் கழுத்தை நெரித்துக் கொன்றது விசாரணையில் தெரியவந்துள்ளது. குற்றத்திற்குப் பிறகு, பூப் சிங்கும் அருணும் உடலை குழியில் புதைத்து மூடியுள்ளனர். இந்த சம்பவம் ஃபரிதாபாத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.