Publish Date: Fri, 27 Jun 2025 (17:02 IST)
Updated Date: Fri, 27 Jun 2025 (17:03 IST)
மொபைல் எண்களை பயன்படுத்தி நடக்கும் மோசடிகளை கட்டுப்படுத்தும் நோக்கில், தொலைத்தொடர்புத் துறை சில புதிய இணைய பாதுகாப்பு விதிகளை முன்மொழிந்துள்ளது. ஜூன் 24 அன்று வெளியிடப்பட்ட இந்த வரைவு விதிகள், தொலைபேசி எண்களின் நம்பகத்தன்மையை உறுதி செய்ய ஒரு புதிய தளத்தை உருவாக்கும் திட்டத்தை விவரிக்கின்றன.
UPI போன்ற பரிவர்த்தனைகளில் வாடிக்கையாளர் அடையாளத்திற்கு மொபைல் எண்களை பயன்படுத்தும் வங்கிகள் போன்ற நிதி நிறுவனங்களும் இந்த தளத்துடன் இணைக்கப்படும். இந்த அமைப்பு "MNV தளம்" (Mobile Number Validation platform) என்று அழைக்கப்படும். இதன்மூலம், அங்கீகரிக்கப்பட்ட அமைப்புகள், ஒரு மொபைல் எண் அங்கீகரிக்கப்பட்ட தரவுத்தளத்தில் இருக்கிறதா என்பதை சரிபார்க்க முடியும்.
புதிய விதிகளின்படி, மத்திய அல்லது மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு நிறுவனம், தொலைத்தொடர்பு தரவுத்தளத்தில் ஒரு மொபைல் எண்ணின் நிலையை சரிபார்க்கும் ஒவ்வொரு கோரிக்கைக்கும் ரூ.1.50 கட்டணம் வசூலிக்கப்படும். பிற நிறுவனங்கள் இதே சரிபார்ப்புக்கு ரூ.3 செலுத்த வேண்டும் என்றும் திருத்தங்கள் தெரிவிக்கின்றன.
இந்த சரிபார்ப்புக் கட்டணத்தை யார் இறுதியாக செலுத்துவார்கள் என்பது இன்னும் தெளிவாகவில்லை. ஆனால், பயனர்கள் தான் இந்தக் கட்டணத்தை செலுத்த நேரிடும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.
இதன்மூலம், மோசடி பரிவர்த்தனைகளில் ஈடுபடும் எண்களை கண்டறிய முடியும். மோசடியில் ஈடுபட்டதாக கண்டறியப்பட்ட எந்த ஒரு எண்ணும் 90 நாட்களுக்கு செயலிழக்கப்படும். இந்த காலக்கெடுவுக்குப் பிறகு, அந்த எண்ணின் வரலாறு தானாகவே அழிக்கப்படும். இதனால், அதே எண்ணை மீண்டும் பெறும் நபர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள் என்றும் உறுதி செய்யப்பட்டுள்ளது.