மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் முறைகேடு செய்வதாக குற்றம் சாட்டிய நிலையில், பெங்களூரு முனி ரெட்டி தோட்டத்தில் உள்ள வீடு எண் 35-இல், வெறும் 10-15 சதுர அடி பரப்பளவு கொண்ட ஒரு சிறிய வீட்டில் 80 வாக்காளர்களின் பெயர்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக குற்றம் சாட்டியிருந்தார்.
ராகுல் காந்தியின் இந்த குற்றச்சாட்டின் உண்மை தன்மையைக் கண்டறிய, முன்னணி ஊடகம், மகாதேவபுரா பகுதியில் உள்ள வாக்குச்சாவடி எண் 470-க்கு உட்பட்ட அந்த முகவரியில் நேரடியாக சென்று ஆய்வு செய்தது. அப்போது, அந்த குறிப்பிட்ட வீட்டில் தீபாங்கர் என்ற உணவு விநியோகம் செய்யும் நபர் வசித்து வந்தது தெரிய வந்தது.
தீபாங்கர் மேற்கு வங்கத்தை சேர்ந்தவர் என்றும், சில மாதங்களுக்கு முன்புதான் இங்கு குடிபெயர்ந்ததாகவும் கூறினார். தான் பெங்களூரு வாக்காளர் பட்டியலில் பதிவு செய்யவில்லை என்றும், அந்த முகவரியில் குறிப்பிடப்பட்டுள்ள மற்ற வாக்காளர்கள் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றும் அவர் தெரிவித்தார்.
தீபாங்கர் வசிக்கும் வீடு பாஜகவை சேர்ந்த ஜெயராம் ரெட்டி என்பவருக்கு சொந்தமானது என்று தெரியவந்தது. ஜெயராமிடம் விசாரித்தபோது, தான் பாஜகவில் உறுப்பினர் இல்லை என்றும், ஆனால் பாஜக வாக்காளர் என்றும் கூறினார். அவர் மேலும் கூறுகையில், "இங்கு தங்கும் நிறைய பேர் வாக்காளர்களாக பதிவு செய்துவிட்டு, பிறகு வேறு இடங்களுக்குச் சென்று விடுகின்றனர். இருந்தாலும், தேர்தல் நேரத்தில் திரும்பி வந்துவிடுகின்றனர். அவர்கள் இங்கு இல்லாவிட்டாலும், வாக்காளர் பட்டியலில் இந்த முகவரிதான் இருக்கிறது" என்று தெரிவித்தார்.
இந்த கள ஆய்வின் மூலம், ராகுல் காந்தி குறிப்பிட்ட வீட்டில் ஒரு சில வாக்காளர்கள் மட்டுமே வசிப்பதும், மற்றவர்கள் வெளியேறிவிட்டனர் என்பதும் தெரிய வந்துள்ளது. இருப்பினும், வாக்காளர் பட்டியலில் அவர்களின் பெயர்கள் நீக்கப்படாமல் இருப்பதற்கான வாய்ப்புகளும் இதன் மூலம் உறுதியாகிறது.