இந்தியாவின் இளம் கிரிக்கெட் வீரரான ரிங்கு சிங், இளம் அரசியல்வாதியான பிரியா சரோஜை திருமணம் செய்ய உள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் இளம் கிரிக்கெட் வீரரான ரிங்கு சிங், ஐபிஎல்லில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். கடந்த சில சீசன்களுக்கு முன்னதாக கடைசி 5 பந்தில் தொடர்ந்து சிக்ஸர்கள் அடித்து கொல்கத்தாவை வெற்றி பெற செய்த ரிங்கு சிங், இந்திய கிரிக்கெட் அணியின் வளர்ந்து வரும் நாயகனாக உள்ளார்.
தற்போது ரிங்கு சிங் 25 வயதான ப்ரியா சரோஜ் என்பவரை திருமணம் செய்து கொள்ள உள்ளார். இவர்களது திருமண நிச்சயதார்த்தம் சமீபத்தில் நடந்து முடிந்துள்ளது.
யார் இந்த ப்ரியா சரோஜ்?
பழம்பெரும் அரசியல்வாதியான துஃபானி சரோஜின் மகள்தான் இந்த ப்ரியா சரோஜ். சட்டம் படித்த ப்ரியா இளம் வயதிலேயே அரசியல் ஆர்வம் கொண்டு அகிலேஷ் யாதவ்வின் சமாஜ்வாடி கட்சியில் இணைந்தார். கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலில் உத்தர பிரதேசத்தின் மச்சிலிசாஹ்ர் தொகுதியில் போட்டியிட்ட ப்ரியா சரோஜ், எதிர் நின்ற பாஜக வேட்பாளரை 35 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார். நாடாளுமன்றத்தில் பங்கு வகிக்கும் இளம் உறுப்பினர்களில் ப்ரியா சரோஜ் ஒருவர்.
ரிங்கு சிங் - ப்ரியா சரோஜ்ஜின் இந்த திருமண நிச்சயதார்த்தம், அரசியல் - கிரிக்கெட் இடையேயான சங்கமமாக நடைபெற கிரிக்கெட் பிரமுகர்களும், அகிலேஷ் யாதவ் உள்பட அரசியல் பிரமுகர்களும் இந்த நிச்சயதார்த்த நிகழ்வில் கலந்துக் கொண்டுள்ளனர்.
Edit by Prasanth.K