டெல்லியில் உள்ள செங்கோட்டை அருகே நிகழ்ந்த அதிர்ச்சிகரமான குண்டுவெடிப்பு சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதை அடுத்து, பிரதமர் நரேந்திர மோடி உடனடியாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தொடர்பு கொண்டு நிலைமையை ஆய்வு செய்தார். இந்த சம்பவம் குறித்து அனைத்து அம்சங்களிலும் ஆழமான விசாரணைக்கு பிரதமர் உத்தரவிட்டுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் எண் 1 வாயில் அருகே மாலை 6.52 மணியளவில், சிக்னலில் மெதுவாக சென்று கொண்டிருந்த நடுத்தர ரக காரில் வெடிகுண்டு வெடித்ததாக டெல்லி போலீஸ் கமிஷனர் சதீஷ் கோல்சா தெரிவித்தார். இந்த வெடிப்பு, அப்பகுதியில் சென்ற பல கார்களை சிதைத்தது.
மிகப்பெரிய நெருப்புப் பந்தை" கண்டதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். இந்த தாக்குதலுக்குப் பிறகு டெல்லி மட்டுமல்லாது, மும்பை, உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களிலும் உயர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உள்துறை அமைச்சர் அமித்ஷா, சம்பவம் குறித்து அனைத்து கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருவதாகவும், மேலும் தகவல்களை விரைவில் வெளியிடுவதாகவும் உறுதியளித்துள்ளார்.