கேரளாவின் காசர்கோட்டில் உள்ள செர்க்கலை அருகே NH-66 சாலையின் செங்கலா-நீலேஸ்வர் பகுதியில் சாய்வு பாதுகாப்புப் பணிகள் தோல்வியடைந்ததை தொடர்ந்து, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஒப்பந்ததாரரான மேகா இன்ஜினியரிங் அண்ட் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட் நிறுவனத்திற்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் விளைவாக, அந்த நிறுவனம் அடுத்த ஓராண்டுக்கு NHAI திட்டங்களுக்கான எந்தவொரு ஒப்பந்த புள்ளி கோரலிலும் பங்கேற்க தடை செய்யப்பட்டுள்ளது.
NH-66 சாலையின் செங்கலா-நீலேஸ்வர் பகுதியில் சாய்வு பாதுகாப்புப் பணிகள் இடிந்து விழுந்ததற்கு குறைபாடுள்ள வடிவமைப்பு, போதுமான சாய்வு பாதுகாப்பு இல்லாதது மற்றும் முறையற்ற வடிகால் அமைப்பு ஆகியவை காரணம் என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்த நிறுவனத்திற்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதுடன், ₹9 கோடி வரை அபராதம் விதிக்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாலை கட்டி முடித்தவுடன் ஒப்பந்ததாரர் 15 ஆண்டுகளுக்கு சாலையைப் பராமரிக்க வேண்டும் என்பது கட்டாயம். சேதமடைந்த சாய்வு பாதுகாப்பு பணிகளை நிறுவனத்தின் சொந்தச் செலவில் மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும் என்று NHAI உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக இந்த சாலையை மதிப்பிடுவதற்கு ஒரு நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் மத்திய சாலை ஆராய்ச்சி நிறுவனத்தின் மூத்த விஞ்ஞானி, ஐஐடி-பாலக்காடின் ஓய்வுபெற்ற பேராசிரியர் மற்றும் இந்தியப் புவியியல் ஆய்வு மையத்தின் அதிகாரிகள் ஆகியோர் அடங்குவர். இந்தக் குழு வடிவமைப்பை மறுபரிசீலனை செய்து திருத்த நடவடிக்கைகளை பரிந்துரைக்கும்.