தமிழகத்தில் சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வரும் வேளையில், தஞ்சை மாவட்டத்தில் உள்ள மானம்பாடி பகுதியில் புதிய சுங்கச்சாவடி ஒன்று அமைக்கப்பட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது.
தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் அறிவிப்பின்படி, தஞ்சை - விக்கிரவாண்டி நெடுஞ்சாலையில் சேத்தியாதோப்பு மற்றும் சோழபுரம் இடையே அமைந்துள்ள இந்த சுங்கச்சாவடி, வரும் ஜூன் 12ஆம் தேதி முதல் செயல்பாட்டுக்கு வரும். அதே நாளிலிருந்து வாகனங்களிடமிருந்து கட்டண வசூலும் தொடங்கப்படவுள்ளது.
இதற்கான கட்டண விவரங்களும் வெளியாகியுள்ளது. சிறிய வாகனங்களான கார் மற்றும் வேன்களுக்கு ஒரே பயணத்துக்கு ரூ.105, அதே நாளில் திரும்பிவந்தால் ரூ.160 வசூலிக்கப்படும். மினி பேருந்துகள் மற்றும் இலகுரக சரக்கு வாகனங்களுக்கு ரூ.170 மற்றும் திரும்ப ரூ.255 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பெரிய பேருந்துகளுக்கு ஒரு பக்கம் ரூ.360, இருமுறை ரூ.540 என்றும், ஏழு சக்கரங்களைக் கடந்த கனரக வாகனங்களுக்கு ஒரு பக்கம் ரூ.685 மற்றும் இருமுறை பயணத்திற்கு ரூ.1,025 எனவும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சுங்கச்சாவடிகளை குறைக்க வேண்டும் என எதிர்ப்புகள் எழுந்த நிலையில், புதிய சுங்கச்சாவடி அமைக்கப்பட்டிருப்பது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.