மும்பை குப்பை மேட்டில் கைவிடப்பட்ட மூதாட்டி: பேரனும், மாமாவும் சிக்கியது எப்படி? - சிசிடிவி காட்சிகள் அம்பலம்!
மும்பையில் உள்ள குப்பை மேட்டில் யசோதா கெய்க்வாட் என்ற 60 வயது மூதாட்டி பரிதாபமாக கைவிடப்பட்ட சம்பவம், நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தோல் புற்றுநோய் மற்றும் மனநல பிரச்சினைகளால் அவதிப்பட்டு வரும் யசோதா கெய்க்வாட், தனது பேரன் சாகர் ஷேவாலே தன்னை குப்பை மேட்டில் போட்டுவிட்டான்" என்று போலீஸாரிடம் வாக்குமூலம் அளித்தார். ஆனால், பேரனோ ஆரம்பத்தில், "பாட்டி தானாகத்தான் வீட்டை விட்டு வெளியேறினார்" என்று சப்பை கட்டு கட்டினார். ஆனால், தற்போது வெளியான சிசிடிவி காட்சிகள், பேரன் கூறியது சுத்தப்பொய் என்பதை அப்பட்டமாக வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளன.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு யசோதா கெய்க்வாட் திடீரென ஆக்ரோஷமாக நடந்து கொண்டதாகவும், தன்னைத்தானே கழுத்தை நெறித்து தற்கொலைக்கு முயன்றதாகவும், பேரனை தாக்க முற்பட்டதாகவும் தெரிகிறது. அதன்பின் குடும்பத்தினர் மூதாட்டியை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முயன்றனர். ஆம்புலன்ஸ் மூலம் ஒரு மருத்துவமனைக்கு சென்றபோது, அங்கே சேவை இல்லை என்று கூறி, மருத்துவமனை நிர்வாகம் அவர்களை அனுமதிக்க மறுத்துவிட்டது.
அதன்பின் அதிகாலை 3:30 மணியளவில், ஆட்டோ ஓட்டுநர் சஞ்சய் குட்ஷிமின் உதவியோடு மூதாட்டியை அவரது பேரன் தர்கா சாலையில் உள்ள குப்பை மேட்டுக்குக் கொண்டு சென்று, அங்கே போட்டுவிட்டு சென்றது தெரியவந்தது.
இதையடுத்து பேரன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனினும், அவர் இன்னும் கைது செய்யப்படவில்லை.
இந்தச் சம்பவம் மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து இந்த வழக்கைப் பரிசீலித்து வருகிறது.