மும்பையில் உள்ள ஒரு குடியிருப்பு கட்டடத்தின் 17வது மாடி பால்கனியில் இருந்து, ஒரு நாய் கொடூரமாக தாக்கப்பட்டு, பின்னர் தூக்கி வீசப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. இந்த நெஞ்சைப் பிழியும் காட்சிகளை விலங்கு நல ஆர்வலர் விஜய் ரங்காரே தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இந்த மனிதாபிமானமற்ற செயலுக்கு ஒரு காவலாளியே காரணம் என்றும் அவர் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
"ஒரு வயது முதிர்ந்த நாயை, அந்த காவலாளி கொடூரமாக துன்புறுத்தி, 17வது மாடியில் இருந்து தூக்கி எறிந்துள்ளார். பாவம் அந்தச் ஜீவன், சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்துவிட்டது," என்று வேதனையுடன் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் விஜய் ரங்காரே எழுதியுள்ளார்.
மேலும் இந்த சம்பவம் குறித்து பதிவு செய்யப்பட்டுள்ளது; சில நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. ஆனால் இது போதாது. இந்த கொடூர குற்றத்தைச் செய்தவருக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும், குரலற்ற அந்த உயிருக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும் நாங்கள் வலியுறுத்துகிறோம்," என்றும் அவர் ஆவேசமாக கூறியுள்ளார்.
அவரது இன்ஸ்டாவில் வெளியான வீடியோவில், ஒரு நபர் கம்பியால் நாயை கொடூரமாக அடிக்கும் காட்சிகளும், பின்னர் அந்த நாய் கீழே விழும் பரிதாபக் காட்சி இடம்பெற்றுள்ளது. பின்னர், அந்த நாயின் உயிரற்ற உடல் தரையில் கிடப்பதையும் வீடியோ காட்டுகிறது. இந்த வீடியோவை கண்ட நெட்டிசன்கள் பலரும் தங்கள் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.