இந்த ஆண்டு அதிக விளைச்சல் காரணமாக மாம்பழத்தின் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. ஒரு கிலோ மாம்பழம் 5 ரூபாய்க்கு விற்பனையாகி வரும் நிலையில், விவசாயிகள் பெரும் அவதிக்குள்ளாகி போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
கடந்த ஆண்டு ஒரு டன் மாம்பழம் 30 ஆயிரம் ரூபாய்க்கு விலை போன நிலையில், இந்த ஆண்டு அது 12 ஆயிரம் ரூபாயாக குறைந்துள்ளது. சில்லறை கடைகளில் ஒரு கிலோ மாம்பழம் 5 ரூபாய்க்கு விற்பனையாகி வருவதால், ஆந்திராவில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதையடுத்து, ஆந்திர அரசு மாம்பழத்தின் விலையை ஒரு கிலோ 8 ரூபாய் என நிர்ணயித்து, அதற்கு 4 ரூபாய் அரசு மானியம் வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்த நிலையில், கர்நாடக மாநிலத்தில் இருந்து மாம்பழங்கள் ஆந்திராவுக்கு கொண்டு வந்து விற்பனை செய்யப்படுவதால், ஆந்திர மாநில விவசாயிகள் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதனை அடுத்து, உள்ளூர் விவசாயிகளின் நலன் கருதி கர்நாடக மாம்பழங்களுக்கு ஆந்திர அரசு தடை விதித்துள்ளது. ஆனால், இந்தியாவை பொருத்தவரையில் ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்கு சென்று வியாபாரம் செய்யும் உரிமை விவசாயிகளுக்கு உண்டு என்று அரசியலமைப்பு சட்டத்தில் வழங்கப்பட்டுள்ளது என கர்நாடக மாம்பழ விவசாயிகள் தெரிவித்து வருகின்றனர்.
ஆந்திராவின் இந்த நடவடிக்கைக்கு போட்டியாகக் கர்நாடகமும் வேறு ஒரு பொருளுக்கு தடை விதித்தால், அது வர்த்தகப் போராக மாறிவிடும் என்றும், இதை ஆந்திர - கர்நாடக மாநில அரசுகள் பேசித் தீர்த்து கொள்ள வேண்டும் என்றும் கூறப்பட்டு வருகிறது.