தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் திடீரென டெல்லி கிளம்பியதாகவும், அவருக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் இருந்து அவசர அழைப்பு வந்ததாகவும் கூறப்படுவது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் தேர்தல் நாள் நெருங்கி வருவதால் அனைத்து அரசியல் கட்சிகளும் சுறுசுறுப்பாக இயங்கி வருகின்றன. இந்த நிலையில், நேற்று மதுரையில் பா.ஜ.க.வின் முருகர் மாநாடு வெற்றிகரமாக நடந்த நிலையில், பா.ஜ.க.வின் இமேஜ் கூடியிருப்பதாக பேசப்பட்டு வருகிறது.
இந்தச் சூழலில், தேசியத் தலைமையில் இருந்து நயினார் நாகேந்திரனுக்கு அவசர அழைப்பு வந்ததால் அவர் டெல்லி சென்று இருப்பதாக பா.ஜ.க. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சில நாட்களுக்கு முன் மாநில நிர்வாகிகள் பட்டியலை தேசிய தலைமைக்கு நயினார் நாகேந்திரன் அனுப்பி வைத்திருந்த நிலையில், இது குறித்து ஆலோசனை செய்வதற்காகத்தான் அவர் அழைக்கப்பட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.
நயினார் நாகேந்திரன் டெல்லியில் இருந்து வந்தவுடன் நிர்வாகிகள் பட்டியலில் மாற்றம் செய்வது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.