பெங்களூருவை சேர்ந்த ஒரு இளைஞர், தனது மனைவி கர்ப்பமாக இருப்பதால் அவரை அருகில் இருந்து கவனித்து கொள்ள வேண்டும் என்பதற்காக, ஆண்டுக்கு ரூ.1.2 கோடி வருமானம் ஈட்டி தரும் தனது வேலையை ராஜினாமா செய்துள்ளார். அவரது இந்த நெகிழ்ச்சியான செயல் சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
அந்த இளைஞர் தனது சமூக வலைதளப் பதிவில், "வாழ்க்கையில் சில முக்கியமான தருணங்களில் உடனிருப்பது மிகவும் அவசியம். இதுபோன்று அழகிய தருணங்களை அனுபவிக்காமல், அதிக வருமானம் ஈட்டி என்ன செய்யப் போகிறோம்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
"பணம் மட்டுமே இருந்தால் போதுமா? என் மனைவிக்கு இந்த நேரத்தில் நான் உடனிருந்து ஆதரவு அளிக்க வேண்டும்" என்றும் அவர் தனது முடிவுக்கு காரணம் கூறியுள்ளார்.
கர்ப்ப காலத்தில் ஒரு மனைவிக்கு கணவரின் உடனிருப்பு எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்து, அதிக சம்பளத்தைக்கூட பொருட்படுத்தாமல் வேலையை விட்ட அந்த இளைஞரின் செயலுக்குப் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.