கொல்கத்தாவை சேர்ந்த மாணவி ஷர்மிஷ்டா பனோலி சர்ச்சைக்குரிய வகையில் வீடியோ வெளியிட்டதாக கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது அவருக்கு கொல்கத்தா உயர் நீதிமன்றம் ஜாமீன் அளித்துள்ளது.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து பாராட்டு தெரிவிக்கவில்லை என பாலிவுட் பிரபல நடிகர்களை நோக்கி மாணவி ஷர்மிஷ்டா பனோலி கேள்வி எழுப்பினார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவர் மத ரீதியிலான உணர்வுகளை தூண்டிவிடுகிறார் என்று புகார் அளிக்கப்பட்டது.
இந்த புகாரின் அடிப்படையில் ஷர்மிஷ்டா பனோலி கைது செய்யப்பட்ட நிலையில், அவருக்கு நீதிமன்றம் ஜாமீன் மறுத்தது. இந்த நிலையில், கொல்கத்தா உயர் நீதிமன்றம் அவருக்கு இடைக்கால ஜாமின் வழங்கியுள்ளது.
ஒரு இளம் பெண்ணின் மரியாதையை பற்றியது என்பது கூட கவலைப்படாமல் இந்த வழக்கை பதிவு செய்துள்ளீர்கள், இது நீங்கள் வெட்கப்பட வேண்டிய ஒன்று என மேற்குவங்க போலீசாருக்கும் அரசுக்கும் கொல்கத்தா உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
மேலும், மாணவிக்கு போலீசார் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும், அவருக்கு மிரட்டல்கள் ஏற்பட்டால் போலீசார் தான் பொறுப்பு என்றும் உத்தரவிடுகிறோம் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும், மாணவி ஷர்மிஷ்டா பனோலி பத்தாயிரம் ரூபாய் ஜாமீன் தொகை செலுத்த வேண்டும் என்றும், கல்விக்காக அல்லாமல் மற்ற நிகழ்வுக்காக வெளிநாடு செல்ல அனுமதி இல்லை என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.