கடந்த சில நாட்களுக்கு முன்னால், ஏர் இந்தியா விமானம் ஒன்று அகமதாபாத்தில் விபத்துக்குள்ளானதில், அந்த விமானத்தில் இருந்த ஒரே ஒரு பயணி தவிர மற்ற அனைவரும் உயிரிழந்தனர். அதேபோல், விமானம் விழுந்த இடத்திலும் சிலர் உயிரிழந்தனர்.
இந்த அதிர்ச்சி இன்னும் மக்கள் மனதில் இருந்து நீங்காத நிலையில், அவ்வப்போது மேலும் சில விமானங்கள் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டு வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம்.
அந்த வகையில், சான் பிரான்சிஸ்கோவிலிருந்து கொல்கத்தா வழியாக மும்பை வந்து கொண்டிருந்த விமானம் திடீரென நடுவானில் பழுதாகி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளன.
இருப்பினும் திட்டமிட்ட நேரத்தில் கொல்கத்தா விமான நிலையத்திற்கு அந்த விமானம் பத்திரமாக தரையிறங்கியதாகவும், விமானி மிகவும் திறமையாக செயல்பட்டு தரையிறக்கியதாகவும் கூறப்படுகிறது.
அகமதாபாத் விமான விபத்திற்கு பிறகும் சில விமானங்கள் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு வரும் நிலையில், அனைத்து விமானங்களையும் சோதனை செய்ய வேண்டும் என்று பயணிகள் மத்தியில் வலியுறுத்தப்பட்டு வருகிறது.