Publish Date: Wed, 09 Feb 2022 (16:10 IST)
Updated Date: Wed, 09 Feb 2022 (17:26 IST)
கர்நாடகாவில் பள்ளி மாணவிகள் ஹிஜாப் அணியும் விவகாரம் வகுப்புவாத வன்முறையாக தீவிரம் அடைந்து வரும் நிலையில், அந்த விவகாரம் தொடர்பான வழக்கை அதிக நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு மாற்றியிருக்கிறார் கர்நாடகா உயர் நீதிமன்ற நீதிபதி.
ஹிஜாப் அணிய உரிமை கோரி அந்த உயர் நீதிமன்றத்தில் சில வாரங்களுக்கு முன்பு மாணவிகள் சிலர் வழக்கு தொடர்ந்திருந்தனர். அந்த மாநிலத்தின் இரு மாவட்டங்களில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் சிலர் காவி சால்வை அணிந்து போராட்டம் நடத்தியனர்.
கர்நாடகாவில் ஹிஜாப் ஆதரவு மற்றும் எதிர்ப்பு மாணவர் குழுவினர் இடையே வன்முறை மற்றும் மோதல்கள் வெடித்ததையடுத்து, பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை மூன்று நாட்களுக்கு மூட மாநில அரசு நேற்று உத்தரவிட்டது.
இந்த விவகாரத்தில் நிர்வாகத்தின் நடவடிக்கை தங்களுடைய அரசியலமைப்பு உரிமையை மீறும் வகையிலும் இருப்பதாகக் கூறி, சுஹா மெளலானா, அய்ஷா அலீஃபா ஆகிய உடுப்பி மாவட்டத்தைச் சேர்ந்த இரு அரசு பல்கலைக்கழக முன் கல்லூரி மாணவிகள், குந்தாபூரைச் சேர்ந்த தனியார் கல்லூரியின் இரு மாணவிகள் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் கடந்த வாரம் மனு தாக்கல் செய்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று (பிப். 09) விசாரணைக்கு வந்தது. அப்போது, இவ்வழக்கை கூடுதல் அமர்வுக்கு மாற்றி கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணா தீட்சித் உத்தரவிட்டுள்ளார்.