Publish Date: Sat, 02 Mar 2019 (16:02 IST)
Updated Date: Sat, 02 Mar 2019 (16:03 IST)
பாகிஸ்தான் ராணுவத்தால் ஒப்படைக்கப்பட்ட இந்திய விங் கமாண்டர் அபிநந்தனின் உடலில் ரகசிய சிப்கள் எதுவும் பொறுத்தப்பட்டுள்ளதா என இந்திய மருத்துவர்கள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி நடந்த காஷ்மீரில் புல்வாமாத் தாக்குதலுக்குப் பதிலடிக் கொடுக்கும் விதமாக கடந்த பிப்ரவரி 27 ஆம் தேதி இந்தியா எல்லைத் தாண்டி பாகிஸ்தானின் பாலகோட் எனும் பகுதியில் நடத்தியது. அந்தத் தாக்குதலுக்குப் பதிலடிக் கொடுக்கும் விதமாக அடுத்த நாள் பாகிஸ்தான் விமானங்கள் எல்லைத் தாண்டி இந்தியாவில் தாக்குதல் நடத்த முயன்றன. ஆனால் இந்திய விமானப்படை அந்த விமானங்களை சுட்டு வீழ்த்தியது. இந்தத் தாக்குதலின் போது இந்திய விமானி அபிநந்தன் வர்தமான் பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கிக்கொண்டார். இரண்டு நாட்களுக்குப் பிறகு அபிநந்தன் நேற்று (மார்ச் 1) அன்று இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.
இதையடுத்து இந்தியா வந்த அபிநந்தனுக்கு முழுமையான உடல் சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த் சோதனைகளில் அபிநந்தனுக்கு ஏதேனும் துன்புறுத்தல்கள் பாகிஸ்தான் ராணுவத்தால் கொடுக்கப்பட்டதா என்றும் அவர் உடலில் எங்கெங்கெல்லாம் காயங்கள் உள்ளன என்றும் சோதனைகள் நடத்தப்பட்டு வருவதாகத் தெரிகிறது.
மேலும் அபிநந்தனின் உடலில் அவருக்கே தெரியாமல் ரகசிய ஜிபிஎஸ் சிப்புகள் ஏதேனும் பொறுத்தப்பட்டு உள்ளதா எனவும் சோதனைகள் நடைபெற்றதாகவும் டெல்லி வட்டாரங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த சோதனைகள் முடிந்தவுடன் அவருக்கு டிபிரிஸிங்க் எனும் மனநல சோதனையும் நடத்தப்படும் எனத் தெரிகிறது. பாகிஸ்தான் ராணுவத்தில் அபிநந்தனிடம் கேட்கப்பட்ட கேள்விகள் அதற்கு அவர் அளித்த பதில்கள் ஆகியவற்றைக் கேட்டுத் தெரிந்துகொண்டு அவரை மனதளவில் இலகுவாக்குவதற்காகவே இந்த சோதனைகள் நடைபெறும் எனக் கூறப்படுகிறது.
இந்த சோதனைகள் முடிந்த பிறகு அபிநந்தன் அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்படுவார் எனத் தெரிகிறது.