இந்தியா - பாகிஸ்தான் இடையே அடிக்கடி முரண்பாடுகள் எழுந்து வந்தாலும், பாகிஸ்தான் இந்தியாவின் முதன்மையான எதிரி நாடு இல்லை என அமெரிக்க புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.
தீபகற்ப நாடான இந்தியா தனது நில எல்லைகளை பாகிஸ்தான், சீனா, நேபாளம், பூடான், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளிடையே பிரிக்கிறது. இதில் ஒரு சில நாடுகளை தவிர்த்து பாகிஸ்தான், சீனா உள்ளிட்ட நாடுகளுடன் எப்போதுமே எல்லை பிரச்சினை இருந்து வருகிறது.
முக்கியமாக பாகிஸ்தான் - இந்தியா இடையேயான பிரச்சினை சுதந்திரம் பெற்றபோது பாகிஸ்தான் தனி நாடாக பிரிக்கப்பட்டதிலிருந்தே தொடர்ந்து வருகிறது. பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காஷ்மீர் பகுதிகளை மீட்க வேண்டும் என்ற எண்ணம் இந்தியாவிடம் தொடர்ந்து இருந்து வருகிறது. சமீபமாக ஆபரேஷன் சிந்தூர் மற்றும் தொடர் தாக்குதல்களால் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான மோதல் போக்கு நீடிக்கிறது.
இந்தியா - பாகிஸ்தான் இடையேயான இந்த முரண்பாடுகள் புவியியல் சார்ந்து மட்டுமல்லாமல் உள்நாட்டு அரசியல் தொடங்கி கிரிக்கெட், சினிமா என பல வகையிலும் பிரதிபலிக்கிறது.
இந்நிலையில் அமெரிக்க புலனாய்வு அமைப்பு சமீபத்தில் உலகளாவிய எல்லை பிரச்சினைகள், அச்சுறுத்தல் தொடர்பான அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் இந்தியாவின் முதன்மை எதிரி நாடாக சீனா இருப்பதாக கூறப்பட்டுள்ளது. சீனாவின் மக்கள் தொகையும், ராணுவ வலிமையும் இந்தியாவுக்கு சற்றேரக்குறைய இருக்கும் நிலையில், இந்தியா சீனாவைதான் முதல் எதிரியாக கருதுவதாகவும், பாகிஸ்தானை பொறுத்தவரையில் அதை நிர்வகிக்கக்கூடிய பிரச்சினையாக கருதுவதாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
Edit by Prasanth.K