பாகிஸ்தானின் உளவுத்துறை அமைப்பான ஐ.எஸ்.ஐ-யுடன் தொடர்பில் இருப்பதாக சந்தேகத்தில் யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா, கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது
இந்த நிலையில் ஜோதியின் மொபைல் மற்றும் லேப்டாப் உள்ளிட்ட டிஜிட்டல் சாதனங்களை போலீசார் ஆய்வு நடத்தி 12 TB டேட்டாவை மீட்டுள்ளனர். இதில், ஜோதி பாகிஸ்தானிய உளவுத்துறை அதிகாரிகளான டானிஷ், அஹ்சன், ஷாஹித் உள்ளிட்ட நால்வருடன் நேரடியாக தொடர்பில் இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் சில அதிர்ச்சி தகவல்களும் அதில் இருப்பதாக கூறப்படுகிறது.
அதிக வருமானமில்லாமல் இருந்தாலும், வெளிநாட்டு பயணங்களிலும், முக்கிய நிகழ்வுகளிலும் மிகுந்த தீவிரம் காட்டிய ஜோதி இந்தியாவின் உள்நாட்டு அமைதி மற்றும் ஒருமைப்பாட்டுக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
மேலும், பாகிஸ்தான் மற்றும் சீனாவிற்கு சென்ற ஜோதி , லாகூர் அனார்கலி பஜாரில் ஏ.கே-47 துப்பாக்கிகளுடன் பாதுகாப்பில் சுற்றியதையும், ஸ்காட்லாந்து யூடியூப்பர் கலம் மில் எடுத்து வெளியிட்ட வீடியோவிலும் காணப்பட்டுள்ளது.
ஜோதிக்கு ஏன் பாகிஸ்தானில் இத்தனை உயர்ந்த பாதுகாப்பு வழங்கப்பட்டது, யார் அதற்குப் பொறுப்பேற்றனர் என்பது குறித்தும் தற்போது ஹரியானா போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.