பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலளிக்க இந்திய ராணுவம் நடத்திய ஆபரேஷன் சிந்தூர் வெற்றியடையவில்லை என்று சிவசேனா (உத்தவ் தாக்கரே பிரிவு) எம்.பி. சஞ்சய் ராவத் விமர்சித்துள்ளார்.
“பஹல்காமில் ஏற்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு காரணம் உள்துறை அமைச்சர் அமித் ஷா. பாதுகாப்பில் தவறிய அவர், பதவியை விலக வேண்டும். பிரதமர் மோடி, அவரை ராஜினாமா செய்ய சொல்ல வேண்டும். ஆபரேஷன் சிந்தூர் ஒரு தோல்வியாகவே பார்க்கப்படுகிறது. இதை மக்களவையில் விவாதிக்க அனுமதி தரப்பட வேண்டும். ராகுல் காந்தியும் இதை கேட்டு உள்ளார்” என அவர் கூறினார்.
மேலும், “உத்தவ் தாக்கரே தலைவணங்க மறுத்துவிட்டதால் தான் பாஜக, சிவசேனாவை உடைத்தது. 2022ல் ஏக்நாத் ஷிண்டே பாஜகவுடன் சேர்ந்து ஆட்சி அமைத்தார். ஆனால் தற்போது மத்தியிலும் மாநிலத்திலும் பாஜக பெரும் தோல்வியால் சிரமப்படுகிறது. இந்நிலையில் மகாத்மா காந்தி, நேரு, இந்திரா மற்றும் மன்மோகன் சிங் போன்றவர்களை குறை கூறி தங்கள் தோல்வியை மறைக்க முயல்கிறார்கள்” என்றார் சஞ்சய் ராவத்.
மேலும், இந்த மாதம் 7ஆம் தேதி இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் பாகிஸ்தானும், பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும் 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டு, 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. உலகமே இந்த தாக்குதலை வெற்றி என கூறி வரும் நிலையில் சிவசேனா இந்த ஆபரேஷன் தோல்வி என கூறியுள்ளது.