சமீபத்தில் நடந்த பிகார் சட்டமன்றத் தேர்தலில், என்டிஏ கூட்டணி 202 இடங்களில் மகத்தான வெற்றி பெற்றது. இக்கூட்டணியில் அங்கம் வகித்த சிராக் பஸ்வானின் லோக் ஜனசக்தி (ராம் விலாஸ்) கட்சி ஒரு முக்கிய சக்தியாக உருவெடுத்துள்ளது.
ராம் விலாஸ் பஸ்வானால் 2000-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட லோக் ஜனசக்தி, 2020 தேர்தலில் உட்பூசல் மற்றும் பிளவுகளுக்கு பிறகு சிராக் பஸ்வானின் தலைமையில் லோக் ஜனசக்தி (ராம் விலாஸ்) என்ற புதிய பெயருடன் 2021-ல் மீண்டும் எழுந்தது.
2020 தேர்தலில் தனித்து போட்டியிட்டு ஒரேயொரு இடத்தைப் பெற்ற சிராக், 2024 மக்களவைத்தேர்தலில் என்டிஏ கூட்டணியில் 5 இடங்களிலும் வென்று தனது பலத்தை நிரூபித்தார். அதன் தொடர்ச்சியாக, இந்த சட்டமன்ற தேர்தலில் நிதிஷ் குமாருடன் இணைந்து போட்டியிட்டார்.
என்டிஏ கூட்டணியில் ஒதுக்கப்பட்ட 29 இடங்களில் போட்டியிட்ட சிராக் பஸ்வானின் கட்சி, 19 இடங்களில் வெற்றி பெற்று, பாஜக, ஐக்கிய ஜனதா தளத்துக்கு அடுத்தபடியாக பிகாரின் மூன்றாவது பெரிய கட்சியாக சாதனை படைத்துள்ளது.
சிராக் பஸ்வான் துணை முதல்வர் பதவிக்கு விருப்பம் தெரிவித்திருந்த நிலையில், அவர் அப்பதவியை ஏற்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.