மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் வியாபாரி ஒருவரிடம் இருந்து ரூ. 80,000 கொள்ளையடிக்க முயன்ற கும்பல், ரூ. 2 லட்சம் மதிப்புள்ள தங்களது பைக்கை சம்பவ இடத்திலேயே விட்டுவிட்டு தப்பிச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது.
போபாலின் அயோத்யா நகர் பகுதியில் வியாழக்கிழமை இரவு 11 மணியளவில், மளிகை வியாபாரி நீரஜ் தனது அன்றாட வருமானத்துடன் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது, ஒரு தனியார் பள்ளி அருகே மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று பேர் கொண்ட கும்பல், அவரிடமிருந்த பணப்பையை பறிக்க முயன்றது.
நீரஜ் அவர்களிடம் சண்டையிட, அவரது ஸ்கூட்டர் கீழே விழுந்தது. இந்த போராட்டத்தின்போது, பணப்பை நீரஜின் கையிலிருந்து நழுவியது. கொள்ளையர்கள் அந்த பையை எடுத்தனர், ஆனால், தங்களது பைக்கை ஸ்டார் செய்ய முயன்றபோது அது ஸ்டார் ஆகவில்லை.
இந்த நிலையில் நீரஜின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த கொள்ளையர்கள், தங்களது பைக்கை அங்கேயே விட்டுவிட்டு, நடந்தே தப்பி ஓடிவிட்டனர்.
காவல்துறை பின்னர் ரூ. 2 லட்சம் மதிப்புள்ள அந்த பைக்கை பறிமுதல் செய்தது. பைக்கின் பதிவு எண்ணை பயன்படுத்தி கொள்ளையர் கும்பலை அடையாளம் கண்டுள்ளனர். விரைவில் கொள்ளையர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.