'வந்தே மாதரம்' பாடலின் 150ஆம் ஆண்டையொட்டி நாடாளுமன்றத்தில் நடக்கும் விவாதம் குறித்து காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி வதேரா குற்றம் சாட்டினார். இது மேற்கு வங்கத் தேர்தலை மனதில் வைத்து, உண்மையான பிரச்சினைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பவே நடத்தப்படுகிறது என்று அவர் கூறினார்.
இதற்கு பதிலளித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேசிய பாடலை அரசியலுடன் இணைப்பது துரதிர்ஷ்டவசமானது என்றார். வந்தே மாதரம் மேற்கு வங்கத்துடன் மட்டும் பிணைக்கப்பட்டது அல்ல என்றும், அது தேசத்தின் அர்ப்பணிப்பை குறிக்கிறது என்றும் கூறினார். மேலும், இந்த விவாதத்தின் முக்கியத்துவத்தை புரிந்துகொள்ள முடியாதவர்கள் சுயபரிசோதனை செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
முன்னாள் பிரதமர் நேரு, சமாதானப்படுத்தும் கொள்கைக்காக வந்தே மாதரத்தை இரண்டு பத்திகளாக குறைத்ததாலேயே பிரிவினை ஏற்பட்டது என்றும் அமித்ஷா குற்றம் சாட்டினார்.
"அந்த சமாதானப்படுத்துதல் கொள்கைதான் நாட்டிற்கு பிரிவினையை கொண்டு வந்தது. சமாதானப்படுத்துதல் கொள்கைக்காக வந்தே மாதரம் பிரிக்கப்படாமல் இருந்திருந்தால், பிரிவினையே நடந்திருக்காது என்று என்னைப் போன்ற பலர் நம்புகின்றனர்" என்றும் அவர் தெரிவித்தார்.
வந்தே மாதரம் 100 ஆண்டுகளை நிறைவு செய்தபோது, இந்திரா காந்தி நெருக்கடி நிலையை பிறப்பித்ததால், வந்தே மாதரம் என்று சொன்ன லட்சக்கணக்கான எதிர்க்கட்சி தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.