சமீபத்தில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, "ஆங்கிலம் பேசுவதற்கு இந்திய மக்கள் வெட்கப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை. ஆங்கிலம் பேசுபவர்கள் வெட்கப்படும் ஒரு சமூகம் விரைவில் உருவாகும். அவர்கள் தான் இந்த நாட்டில் மாற்றத்தைக் கொண்டு வரப் போகிறார்கள்," என்று பேசினார். "ஒரு அந்நிய மொழியில் நமது வரலாறு, கலாச்சாரம், மதத்தை எளிதில் புரிந்துகொள்ள முடியாது. எனவே, முழுமையான இந்தியாவை அந்நிய மொழியால் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது," என்றும் அவர் குறிப்பிட்டார்.
அமித்ஷாவின் இந்தக் கருத்துக்கு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி காட்டமான பதிலடி கொடுத்துள்ளார். அவரது பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "ஆங்கிலம் என்பது அணை அல்ல, ஒரு பாலம். அவமானம் அல்ல, ஒரு சக்தி. சங்கிலிகளை உடைக்கும் ஒரு கருவி.
இந்தியாவில் ஏழை குழந்தைகள் ஆங்கிலம் கற்றுக்கொள்வதை பாஜக, ஆர்.எஸ்.எஸ். விரும்பவில்லை. ஏனென்றால், அவர்கள் ஆங்கிலம் கற்றுவிட்டால் கேள்வி கேட்பார்கள். அவர்கள் கேள்வி கேட்பதை நீங்கள் விரும்பவில்லை," என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
"இன்றைய உலகில் ஆங்கிலம் உங்கள் தாய்மொழியை போல முக்கியமானது. வேலைவாய்ப்பு, தன்னம்பிக்கை ஆங்கிலம் தெரிந்தால் அதிகரிக்கும். இந்தியாவின் ஒவ்வொரு மொழிக்கும் ஆன்மா, கலாச்சாரம், அறிவு உள்ளது. அதே நேரத்தில், ஒவ்வொரு குழந்தைக்கும் ஆங்கிலமும் முக்கியம்," என்றும் ராகுல் காந்தி பதிலடி கொடுத்துள்ளார்.