கடந்த இரண்டு மாதங்களில் இரண்டு முறை அமித்ஷா தமிழகம் வந்து, அதிமுக - பாஜக கூட்டணி அரசுதான் அமையும் என கூறியது அதிமுக தலைவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இனிமேல் கூட்டணி ஆட்சி என்று சொன்னால், அதிமுக கூட்டணியிலிருந்து பாஜக கழட்டி விடப்படும் முடிவை எடப்பாடி பழனிசாமி எடுப்பார் என அதிமுக வட்டாரங்கள் கூறி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் சென்னை வந்த அமித்ஷா, "அதிமுக தலைமையிலான கூட்டணி ஆட்சி அமையும்" என்று தெரிவித்தார். ஆனால், கடந்த நான்கு நாட்களுக்கு முன் மதுரை வந்த அமித்ஷா, "பாஜக - அதிமுக கூட்டணி ஆட்சி அமையும்" என்று அறிவித்துள்ளார்.
இதனால் அதிமுக தலைவர்கள் அதிர்ச்சியில் இருக்கும் நிலையில், "கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும், இனி ஒரு முறை கூட்டணி ஆட்சி என அமித்ஷா சொன்னால், அதிமுக கூட்டணியில் இருந்து பாஜகவை வெளியேற்றவும் எடப்பாடி பழனிசாமி தயங்க மாட்டார் என்றும்" கூறி வருகின்றனர்.
பாஜக வெளியேறினால் விஜய் கூட்டணிக்குள் வர தயாராக இருப்பதாகவும் கூறப்படுவதால், பாஜக இனி அடக்கி வாசிக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.