இந்திய பங்குச் சந்தை கட்டுப்பாட்டு வாரியமான செபி அதானி குழுமத்தின் மீதான ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என அறிவித்ததை தொடர்ந்து, அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி, “வாய்மையே வெல்லும்! ஜெய் ஹிந்த்!” என சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
கடந்த 2023-ம் ஆண்டு, அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம், அதானி குழுமத்தின் பங்குகள் செயற்கையாக உயர்த்தப்பட்டதாக குற்றம் சாட்டியது. இந்த குற்றச்சாட்டால் அதானி குழுமத்தின் பங்குகள் கடுமையான வீழ்ச்சியை சந்தித்தன. இதையடுத்து, செபி இந்த குற்றச்சாட்டுகள் குறித்து முழுமையான விசாரணையை தொடங்கியது.
விசாரணையின் முடிவில், ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டுகளுக்கு எந்தவித ஆதாரமும் இல்லை என செபி அறிவித்துள்ளது. இது குறித்து தனது 'X' பக்கத்தில் பதிவிட்ட கௌதம் அதானி, "ஹிண்டன்பர்க் வெளியிட்ட குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்று நாங்கள் தொடர்ந்து கூறி வந்தோம். தற்போது, அதை செபி மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. இந்தியாவின் வளர்ச்சிக்கான எங்கள் அர்ப்பணிப்பு அசைக்க முடியாதது" என்று கூறி, தனது பதிவை "வாய்மையே வெல்லும்! ஜெய் ஹிந்த்!" என்று முடித்தார்.