கர்நாடகாவில் கள்ளக்காதலில் ஈடுபட்ட மூன்றாவது மனைவியை கணவன் பெட்ரோல் ஊற்றி கொளுத்திக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் ஆனேக்கல் பகுதியில் உள மல்லனசந்திரா கிராமத்தை சேர்ந்தவர் விட்டல். 52 வயதாகும் விட்டல் டிரைவராக பணியாற்றி வருகிறார். விட்டலுடைய முதல் மனைவி பல ஆண்டுகளுக்கு முன்னர் உயிரிழந்த நிலையில் இரண்டாவது திருமணம் செய்துள்ளார். ஆனால் அவருடைய இரண்டாவது மனைவிக்கு வேறு ஒருவருடன் கள்ளத்தொடர்பு உண்டான நிலையில், விட்டலுடன் வாழ பிடிக்காமல் காதலனுடன் ஓடிவிட்டார்.
இந்நிலையில்தான் விட்டலுக்கு மல்லனசந்திராவை சேர்ந்த 26 வயது வனஜாக்சி என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. வனஜாக்சி கணவரை இழந்து தனியாக வாழ்ந்து வந்த நிலையில் இருவருடையே ஏற்பட்ட பழக்கத்தால் தனியாக வீடு எடுத்து குடும்பம் நடத்தி வந்துள்ளனர். அப்போது வனஜாக்சிக்கு அப்பகுதியை சேர்ந்த வேறு நபருடன் கள்ள உறவு ஏற்பட்டதாக தெரிகிறது. இதை விட்டல் கண்டித்து வந்துள்ளார்.
ஆனால் அதை கேட்காத வனஜாக்சி கடந்த ஆகஸ்டு 30 அன்று கள்ளக்காதலனுடன் காரில் எங்கேயோ சென்றுள்ளார். அப்போது வனஜாக்சியை மடக்கி பிடித்த விட்டல் அவரோடு வாக்குவாதம் செய்துள்ளார். பின்னர் ஆத்திரமடைந்த அவர் வனஜாக்சி மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்துள்ளார். தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வனஜாக்சி சிகிச்சை பலனின்றி பலியான நிலையில் விட்டலை போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.