திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வசந்த உற்சவ விழா இன்று முதல் மூன்று நாட்கள் நடைபெறுகிறது. இந்த விழா கோவிலின் பின்புறத்தில் அமைந்துள்ள வசந்த மண்டபத்தில் இன்று காலை ஆரம்பமானது.
காலை 6.30 மணிக்கு, ஸ்ரீ வெங்கடேஸ்வரர் மாடவீதிகளில் எழுந்தருளி, வீதியுலா நடந்தது. நாளை, வசந்த உற்சவத்தின் இரண்டாம் நாளில், தங்கத்தேரில் எழுந்தருளும் சிறப்பு நிகழ்வாகத் தங்க தேரோட்டம் நடைபெற உள்ளது. இந்த உற்சவத்தில், ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன் சேர்ந்து திருமலையப்பன் எழுந்தருளவுள்ளார்.
இந்த வைபவத்தை முன்னிட்டு மூன்று நாட்களுக்கு பல்வேறு அர்ச்சனை சேவைகள் தற்காலிகமாக ரத்து செய்யப்படுகின்றன. தொடர்ச்சியான விடுமுறையின் காரணமாக கோவிலில் பக்தர்கள் பெருமளவில் திரண்டுள்ளனர்.
நேற்றைய தினம் மட்டும் 62,076 பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். 23,699 பேர் தங்கள் முடியை காணிக்கையாக வழங்கியுள்ளனர். உண்டியலில் ரூ.3.21 கோடி காணிக்கையாக சேர்க்கப்பட்டுள்ளது. நேரடி இலவச தரிசனத்திற்கு வந்த பக்தர்கள், சுமார் 10 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.