சிவபெருமானுக்கு உகந்த மிக முக்கியமான விரத நாட்களில் ஒன்று பிரதோஷம். ஒவ்வொரு மாதமும் இரண்டு முறை வரும் இந்த விரதம், நாளை அதாவது திங்கட்கிழமை ஆஷாட கிருஷ்ண பக்ஷத்தில் வருவதால், இது சோம வார பிரதோஷம் எனப்படுகிறது. இந்த நாளில் சிவபெருமானை வழிபடுவது ஆன்மிக வளர்ச்சி, அமைதி, மற்றும் செல்வ செழிப்பை பெற்றுத்தரும்.
சனிக்கிழமையில் வரும் சனிப்பிரதோஷம் எவ்வளவு விசேஷமோ, அதேபோல் திங்கட்கிழமையில் வரும் சோமவார பிரதோஷமும் மிகவும் சிறப்பு வாய்ந்தது. சிவபெருமானுக்கும் சந்திரனுக்கும் உரிய திங்கட்கிழமை, பிரதோஷத்துடன் இணைவது மேலும் சிறப்பு. அதிலும் நாளை சோமவார பிரதோஷம், ஆனி மாத சிவராத்திரி மற்றும் முருக பெருமானுக்குரிய கிருத்திகை நட்சத்திரத்துடன் இணைந்து வருவது மிக மிக அபூர்வமான நிகழ்வு. முருகனும் சிவபெருமானும் ஒன்றே என்பதால், இந்த நாளில் இருவரையும் வழிபடுவது கூடுதல் பலன் தரும்.
பிரதோஷத்தன்று அதிகாலையில் நீராடி, திருநீறு அணிந்து, "நமசிவாய" என உச்சரித்து உபவாசம் இருக்க வேண்டும். காலை முதல் பிரதோஷம் முடியும் வரை உணவு தவிர்த்து, பிரதோஷ தரிசனத்திற்குப் பிறகு பிரசாதம் உண்டு விரதத்தை முடிக்கலாம்.
சிவபெருமான் அபிஷேகப் பிரியர் என்பதால், பசும்பால் அல்லது இளநீர் கொண்டு அபிஷேகம் செய்து வழிபடலாம். வில்வ இலை அர்ச்சனை, தும்பைப் பூ மாலை அணிவித்து வழிபடுவது சகல தோஷங்களையும் நீக்கும். முருகப்பெருமானுக்குரிய கந்த சஷ்டி கவசம், வேல் மாறல் போன்றவற்றை பாராயணம் செய்யலாம்.
மாலை 4 மணி முதல் இரவு 7:30 மணி வரை பிரதோஷ காலம் என்பதால், இந்த நேரத்தில் வழிபடுவது விசேஷமானது. தொடர்ந்து பதினோரு பிரதோஷங்கள் விரதம் இருந்தால் சிவனருள் கிட்டும். பிரதோஷ விரதம் மேற்கொண்டால் திருமணம் கைகூடும், குழந்தை பாக்கியம் கிடைக்கும், வறுமை நீங்கும், நோய்கள் விலகும், சகல காரியங்களிலும் வெற்றி கிடைக்கும், சகல சௌபாக்கியங்களும் பெருகும்.
நமசிவாய சொல்லுவோம்; நல்லனவற்றையெல்லாம் பெறுவோம்!