பிரபல டெலிகாம் நிறுவனமான ஜியோ நிறுவனம் பங்குச்சந்தையில் IPO வெளியிட உள்ளதாக அறிவித்துள்ள நிலையில் முதலீட்டாளர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
இந்தியாவில் அதிகமான மக்களால் பயன்படுத்தப்படும் டெலிகாம் நிறுவன சேவையாக ரிலையன்ஸ் ஜியோ இருந்து வருகிறது. டெலிகாம் சேவை மட்டுமல்லாமல், ஏர் ஃபைபர், ப்ராட்பேண்ட், ஜியோ டிவி ஓஎஸ், ஜியோ சாவன் என பலத்தரப்பட்ட சேவைகளையும் வழங்கி வரும் ஜியோ அடுத்தக்கட்டமாக சொந்தமாக ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவை தயாரிப்பதிலும் ஈடுபட்டுள்ளது.
இன்று ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் வருடாந்திர பொதுக்கூட்டம் நடந்த நிலையில் அதில் பேசிய ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் சேர்மன் முகேஷ் அம்பானி, இந்தியாவில் ஜியோ வாடிக்கையாளர்கள் 500 மில்லியனை கடந்து புதிய சாதனையை படைத்திருப்பதாக தெரிவித்தார். அதை தொடர்ந்து ஏஐ தொழில்நுட்பம் மூலம் ரிலையன்ஸ் புதிய உச்சத்தை தொட உள்ளதாக கூறிய அவர் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் பங்குச்சந்தையில் ரிலையன்ஸ் ஜியோவின் IPO, இனிஷியல் பப்ளிக் ஆஃபரிங் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர் “இன்று, ஜியோ அதன் ஐபிஓக்கு விண்ணப்பிக்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறது என்பதை பெருமையுடன் அறிவிக்கிறேன். 2026-இன் முதல் பாதியினுள், தேவையான அனைத்து அனுமதிகளும் பெற்றுக்கொண்ட பிறகு, ஜியோவை பட்டியலிடுவதை இலக்காக வைத்துள்ளோம். இந்த நடவடிக்கை, ஜியோ தனது உலகளாவிய பங்காளிகளுடன் சம அளவிலான மதிப்பை உருவாக்கும் திறமை கொண்ட நிறுவனமாக இருப்பதை நிரூபிக்கும். எல்லா முதலீட்டாளர்களுக்கும் இது மிகவும் சுவாரஸ்யமான வாய்ப்பாக இருக்கும்” என்று கூறியுள்ளார்.
ரிலையன்ஸ் ஜியோவின் இந்த அறிவிப்பு எவ்வளவு பங்கு மதிப்பில் ஐபிஓ வெளியிடப்படும், அலாட்மெண்ட் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பை முதலீட்டாளர்கள் இடையே ஏற்படுத்தியுள்ளது.
Edit by Prasanth.K