Publish Date: Thu, 22 May 2025 (08:04 IST)
Updated Date: Thu, 22 May 2025 (08:13 IST)
கடந்த ஆண்டு இறுதியில் நடந்த ஐபிஎல் ஏலத்தில் ரிஷப் பண்ட் 27 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டு அனைவரையும் வாய்பிளக்கவைத்தார். இதுவரை நடந்த ஐபிஎல் ஏலத்தில் அதிக தொகைக்கு எடுக்கப்பட்ட வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.
லக்னோ அணிக்குக் கேப்டனாக நியமிக்கப்பட்ட அவர் அதன் பின்னர் செய்ததுதான் மகா சொதப்பல். இந்த ஆண்டு நடந்த போட்டிகளில் ஒரே ஒரு அரைசதம் தவிர்த்து மற்ற அனைத்துப் போட்டிகளிலும் சொதப்பி வருகிறார். இதன் காரணமாக லக்னோ அணி இந்த முறை ப்ளே ஆஃப் செல்லவில்லை. அதற்கு முழுப் பொறுப்பையும் ரிஷப் பண்ட்தான் ஏற்கவேண்டும் என்று சொன்னால் அது மிகையாகாது.
இந்நிலையில் யுவ்ராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங் ரிஷப் பண்ட் பற்றி பேசியுள்ளார். அதில் “ரிஷப் பண்ட்டிடம் இருக்கும் பிரச்சனைகளை நான் ஐந்து நிமிடத்தில் சரி செய்வேன். அவர் தலை நிலையாக இல்லை. அவரது இடது தோளை அதிகமாக விரியச்செய்து ஷாட்களை ஆடுகிறார். இந்த பிரச்சனைகளில் அவர் கவனம் செலுத்தினால் அவர் மீண்டும் தன்னுடைய சிறந்த செயல்பாட்டுக்குத் திரும்புவார்” எனக் கூறியுள்ளார்.