Publish Date: Mon, 14 Apr 2025 (12:44 IST)
Updated Date: Mon, 14 Apr 2025 (12:46 IST)
நடப்பு ஐபிஎல் தொடர் பரபரப்பாக நடந்து வரும் நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பரிதாபகரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் நிலையில் கேப்டன் ருத்துராஜ் கையில் ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாக எஞ்சிய போட்டிகளில் இருந்து விலகினார். அவருக்குப் பதில் தோனி மீண்டும் கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ளார். ஆனால் தோனி கேப்டனான பின்னரும் சிஎஸ்கே அணி வெற்றிப்பாதைக்கு திரும்பவில்லை. கொல்கத்தா அணிக்கு எதிராக படுமோசமாக தோற்றது. இதனால் தோனி என்ற காற்று வளையம் உடைய ஆரம்பித்துவிட்டதாக விமர்சனங்கள் எழத் தொடங்கியுள்ளன.
கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் கூட அடுத்தடுத்து விக்கெட்கள் விழ, தோனி முன்பே இறங்காமல் ஒன்பதாவது பேட்ஸ்மேனாக இறங்கினார். அவருக்கு முழங்காலில் பிரச்சனை இருப்பதாக சொல்லப்பட்டாலும், அதை ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இல்லை.
இந்நிலையில் சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் தோனி பற்றி பேசியுள்ள கருத்து கவனம் பெற்றுள்ளது. அதில் ”அணியில் தோனியின் பங்கு முக்கியம்தான். ஆனால் அவர் கையில் மந்திரக் கோல் எதுவும் இல்லை. அவரால் எல்லாவற்றையும் தனியாளாக மாற்ற முடியாது. கூட்டு முயற்சியால்தான் வெற்றிக் கிடைக்கும்” எனக் கூறியுள்ளார்.