ஐபிஎல் தொடரின் 18 ஆவது சீசன் தொடங்கி மிகச்சிறப்பாக போய்க் கொண்டிருக்கிறது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஐதராபாத் ஆகிய அணிகள் மோதின. இந்த போட்டியில் சன் ரைஸர்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
இந்த போட்டியில் முதலில் பேட் செய்த அதிரடிக்குப் பெயர் போன SRH அணியை குஜராத் அணி பவுலர்கள் 152 ரன்களில் சுருட்டினர். அதையடுத்து ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 17 ஆவது ஓவரில் இலக்கை எட்டி வெற்றி வாகை சூடியது. குஜராத் அணியில் சிறப்பாகப் பந்துவீசி முகமது சிராஜ் 4 விக்கெட்களை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதைப் பெற்றார்.
போட்டி முடிந்த பின்னர் பேசிய குஜராத் டைட்டன்ஸ் அணிக் கேப்டன் ஷுப்மன் கில் “உண்மையில் டி 20 கிரிக்கெட்டில் பந்துவீச்சாளர்களே ஆட்டத்தின் போக்கை மாற்றக் கூடியவர்கள். ஆனால் டி 20 என்றாலே பலரும் அதிரடியான ஷாட்களை விளையாடும் பேட்ஸ்மேன்கள் பற்றிதான் பேசுகிறார்கள். ஆனால் உண்மையில் பவுலர்களே அணிக்கு வெற்றியைப் பெற்றுத் தரக் கூடியவர்கள்” எனக் கூறியுள்ளார்.