ஐபிஎல் தொடரில் அதிக முறை சாம்பியன் பெற்ற அணிகளில் ஒன்று சென்னை சூப்பர் கிங்ஸ். அந்த அணி இதுவரை 5 முறைக் கோப்பையை வென்றுள்ளது. அந்த ஐந்து முறையும் தோனிதான் சி எஸ் கே அணிக்குக் கேப்டனாக வழிநடத்தினார். ஆனால் கடந்த ஆண்டு அந்த அணியில் கேப்டன் பொறுப்பு தோனியிடம் இருந்து ருத்துராஜுக்குக் கைமாற்றப்பட்டது.
தோனியின் வயதைக் கணக்கில் கொண்டும், தோனி இருக்கும்போதே அடுத்தக் கேப்டனைத் தயார் செய்வதற்கும் இந்த முடிவு எடுக்கப்பட்டது. கடந்த ஆண்டு சி எஸ் கே அணி ப்ளே ஆஃபுக்கு செல்லவில்லை. இந்த ஆண்டும் முதல் நான்கு போட்டிகளில் மூன்றில் தோற்றுள்ளது. இதனால் அணி மீது பல தரப்பில் இருந்து விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் அஸ்வின் நடத்தி வரும் யுடியூப் சேனல் ஐபிஎல் போட்டிகள் பற்றிய அலசல் வீடியோவை வெளியிட்டு வந்தது. அதில் சி எஸ் கே அணியின் தோல்விக்கு அந்த அணி சரியான வீரர்களை அணியில் எடுக்காததுதான் காரணம் என்று கருத்து தெரிவிக்கப்பட்டது. அது சர்ச்சையைக் கிளப்பிய நிலையில் தற்போது சி எஸ் கே போட்டி பற்றிய அலசல் வீடியோவை தாங்கள் வெளியிடப்போவதில்லை என அந்த சேனல் அறிவித்துள்ளது. சி எஸ் கே அணியில் அஸ்வின் இருப்பதால், அவர் நடத்தும் சேனலில் அணியின் குறைபாடுகளைப் பேசுவது சர்ச்சை எழுந்ததால் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம் என தோன்றுகிறது.