ஐபிஎல் தொடர் ஆரம்பிக்கப்பட்ட போது முதல் சீசனில் கோப்பையை வென்ற அணி ராஜஸ்தான் ராயல்ஸ். ஆனால் அதன் பிறகு 17 ஆண்டுகளாக அந்த அணியால் கோப்பையை வெல்ல முடியவில்லை. நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் மோசமான வெற்றிகளைப் பெற்று ப்ளே ஆஃப்க்குத் தகுதி பெறாத அணியாக பின்னடைவை சந்தித்தது ராஜஸ்தான் ராயல்ஸ்.
அந்த அணியின் தலைமைப் பொறுப்பை ஏற்று சஞ்சு சாம்சன் வழிநடத்தினாலும் காயம் காரணமாக நான்கு போட்டிகளில் அவருக்குப் பதிலாக ரியான் பராக்தான் கேப்டனாக செயல்பட்டார். மேலும் அவருக்குப் பதிலாக இளம் வீரரான ரியான் பராக்கிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவது போன்ற ஒரு தோற்றமும் எழுந்தது.
இந்நிலையில் சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து விலகும் முடிவை எடுத்துள்ளதாக கிசுகிசுக்கள் உலவ ஆரம்பித்தன. அவரை சி எஸ் கே அணி ட்ரேடிங் மூலமாக வாங்க விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் சஞ்சு சாம்சனைக் கொடுத்துவிட்டு ஜடேஜாவைப் பெற்றுக்கொள்ள அந்த அணி விருப்பம் தெரிவித்ததாக சொல்லப்பட்டது.
ஆனால் ஜடேஜாவைக் கொடுக்க சி எஸ் கே அணிக்கு விருப்பமில்லை என சொல்லப்பட்டுவிட்டதாக முன்னர் தகவல் பரவியது. இந்நிலையில் இப்போது மீண்டும் சஞ்சு- ஜடேஜா ட்ரேட் பேச்சுவார்த்தைத் தீவிரமாக நடந்து வருவதாக சொல்லப்படுகிறது. சாம்சனுக்குப் பதில் ஜடேஜாவை மட்டுமில்லாமல் டிவால்ட் பிரவீஸையும் ராஜஸ்தான் அணி கேட்பதாக சொல்லப்படுகிறது.