Publish Date: Wed, 16 Apr 2025 (07:16 IST)
Updated Date: Wed, 16 Apr 2025 (07:25 IST)
நடப்பு ஐபிஎல் தொடர் பரபரப்பாக நடந்து வரும் நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பரிதாபகரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் நிலையில் கேப்டன் ருத்துராஜ் கையில் ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாக எஞ்சிய போட்டிகளில் இருந்து விலகினார். அவருக்குப் பதில் தோனி மீண்டும் கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ளார்.
தோனி கேப்டனான பின்னர் சி எஸ் கே அணி ஒரு போட்டியில் வெற்றியும் ஒரு போட்டியில் தோல்வியும் பெற்றுள்ளது. தற்போது வரை ஐந்து தோல்விகளோடு அந்த அணி புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இந்நிலையில்தான் சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் தோனி பற்றி தெரிவித்த கருத்து கவனம் பெற்றது. அதில் ”அணியில் தோனியின் பங்கு முக்கியம்தான். ஆனால் அவர் கையில் மந்திரக் கோல் எதுவும் இல்லை. அவரால் எல்லாவற்றையும் தனியாளாக மாற்ற முடியாது. கூட்டு முயற்சியால்தான் வெற்றிக் கிடைக்கும்” எனக் கூறியிருந்தார்.
ஆனால் வர்ணனையாளர் இஷன் பிஷப் பிளமிங்கின் இந்த கருத்தை தான் ஏற்கவில்லை எனக் கூறியுள்ளார். மேலும் அவர் “தோனி தலைமை தாங்கும் வரை அந்த அணியை நான் ப்ளே ஆஃப் செல்லும் வாய்ப்பு இல்லாத அணி என ஒதுக்கி விட மாட்டேன். என்னதான் பிளமிங் தோனி ஒன்றும் மந்திரக்காரர் இல்லை என்று சொன்னாலும் தோனி களத்தில் அற்புதங்களை நிகழ்த்துபவர்தான். அவருக்கு எதிராக நான் பந்தயம் கட்டமாட்டேன்” எனக் கூறியுள்ளார்.