Publish Date: Mon, 31 Mar 2025 (09:37 IST)
Updated Date: Mon, 31 Mar 2025 (09:39 IST)
ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதிக் கொண்டன. முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 182 ரன்களை குவித்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் சஞ்சு சாம்சன், ஜெய்ஸ்வால் உள்ளிட்ட முக்கிய பேட்ஸ்மேன்களின் விக்கெட்களை சென்னை அணி விரைவாக வீழ்த்திய போதும் நிதீஷ் ராணாவைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அவர் தொடர்ந்து அதிரடியாக ஆடி 36 பந்துகளில் 81 ரன்கள் சேர்த்தார். அவரின் இந்த இன்னிங்ஸ்தான் வெற்றிக்கு முக்கியக் காரணியாக அமைந்தது.
சேஸிங் சென்ற சிஎஸ்கே 176 ரன்களே எடுத்து வெறும் 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்த போட்டியில் தோனி கடைசி ஓவரில் பேட் செய்தும் அவரால் இலக்கை எட்டவைக்க முடியாமல் விக்கெட்டை இழந்து வெளியேறினார். இதன் மூலம் இந்த சீசனில் தோனியின் சாயம் வெளுக்கத் தொடங்கிவிட்டதாக விமர்சனங்கள் எழத் தொடங்கியுள்ளன.
இந்நிலையில் கடந்த 4 வருடங்களாக சி எஸ் கே அணி சேஸிங்கில் பயங்கரமாக சொதப்பி வருகின்றனர். 2021 ஆம் ஆண்டுக்குப் பிறகு சேஸிங்கில் 175 ரன்களுக்கு மேல் இலக்கு உள்ள போட்டிகளில் 9 முறை விளையாடி ஒருமுறை சேஸ் செய்ததில்லை என்ற மோசமான சாதனையைப் படைத்து வருகின்றனர்.