Publish Date: Tue, 01 Apr 2025 (07:02 IST)
Updated Date: Tue, 01 Apr 2025 (07:24 IST)
ஐபிஎல் தொடரில் ஐந்து முறை கோப்பையை வென்று கலக்கிய மும்பை இந்தியன்ஸ் அணி கடந்த சில ஆண்டுகளாக மிக மோசமாக விளையாடி வருகின்றது. அந்த அணியில் இருந்து சில வீரர்கள் வெளியேறியது, கேப்டன்சி மாற்றத்தால் ஏற்பட்ட குளறுபடி என தடுமாறி வருகிறது.
இந்நிலையில் தற்போது நடைபெற்று வரும் சீசனில் முதல் இரண்டு போட்டிகளையும் தோற்று புள்ளிப் பட்டியலில் பின் வரிசையில் இருந்த மும்பை இந்தியன்ஸ், நேற்று கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியை வென்றுள்ளது. மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடந்த போட்டியில் முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி 116 ரன்கள் மட்டுமே சேர்த்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அதிரடியாக ஆடும் தன்மை கொண்ட கொல்கத்தா அணியை இவ்வளவு குறைவான ரன்களுக்குள் கட்டுப்படுத்த அந்த அணியின் அறிமுகப் பவுலர் அஸ்வனி குமாரின் அபாரமான பந்துவீச்சேக் காரணமாக அமைந்தது. அவர் 24 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்களை வீழ்த்தி அசத்தி ஆட்டநாயகன் விருதை வென்றார்.
போட்டி முடிந்ததும் பேசிய அவர் “நான் போட்டியில் இடம்பெற போகிறேன் என்ற செய்தி வந்ததில் இருந்து ஒருவித பதற்றத்திலேயே இருக்கிறேன். இதனால் எனக்குப் பசியே இல்லை. மதிய உணவாக ஒரே ஒரு வாழைப்பழம் மட்டுமே சாப்பிட்டேன். ஆனால் அணி நிர்வாகம் என்னைக் கவலையில்லாமல் விளையாட ஊக்கப்படுத்தியது” எனக் கூறியுள்ளார்.