கிரகங்களை கண்டுபிடித்தது எப்படி?
ஜோதிட ரத்னா க.ப. வித்யாதரன்
Publish Date: Tue, 11 Dec 2007 (17:10 IST)
Updated Date: Tue, 11 Dec 2007 (17:10 IST)
ஜோதிடத்திற்கு அடிப்படையான கிரகங்களில் ராகு, கேது ஆகிய இரண்டும் வெற்றிடங்களே. விஞ்ஞானப் பூர்வமாகப் பார்த்தால் அவைகள் வெற்றிடங்கள். அறிவியல் ஆய்வுகள் இதனை உறுதி செய்துள்ளன என்று ஜோதிட ரத்னா முனைவர் க.ப. வித்யாதரன் கூறினார். கிரகங்களை மட்டுமல்ல, இந்த இரண்டு நிழல் கிரகங்களும் ஞான சிருஷ்டியால் கண்டுபிடிக்கப்பட்டது. ஞானக் கண்ணால் பார்ப்பது. ஒரு சித்தர் தனது தியான சக்தியின் மூலமாக பல லட்சம் மைல்கள் கூட தாண்டி பயணிக்க முடியும். மகாபாரதம், கம்பராமாயணம் ஆகியவற்றில் பார்த்தால் மேலுலகம், கீழுலகம் என்று கூறப்பட்டுள்ளது. வசிஷ்டர், விஸ்வமித்திரர், பிருகு முனிவர் ஆகியோர் தற்பொழுது உள்ள ஒரு சூரிய குடும்பம் போல 7 சூரிய குடும்பங்கள் உள்ளதென கூறியுள்ளனர்.நாம் சதை, ரத்தம் கூட்டமைப்பான உடலில் இந்தப் பூமியில் உள்ளோம். மீதமுள்ள உலகங்களிலும் உயிரினங்கள் உண்டு. ஆனால் அவைகளின் உடல்கள் அதாவது கூட்டமைப்பு வித்தியாசப்படும், வடிவத்திலும் வித்தியாசமாக இருக்கலாம். குள்ள மனிதர், பறக்கும் தட்டுகள் ஆகியன அயல் கிரகவாசிகளின் வருகையாகவே கூறுகிறார்கள்.அவர்கள் நம்மைக் காட்டிலும் பல மடங்கு ஆற்றலும், செயலாற்றலும் பெற்றுள்ளவர்கள் என்றும் கூறப்படுகிறது.எந்த வித வசதியும் இல்லாத காலக்கட்டத்தில் தங்களது ஞானப் பார்வையால் செவ்வாய் கிரகத்திலுள்ள வாயுக்கள், ஒளி அலைகள் ஆகியவற்றை உணர்ந்து செந்நிறக் கதிர்வீச்சுகள், செம்மண் பகுதிகள், செம்மலைப் பள்ளத்தாக்குகள், அதிகம் இருப்பதை அறிந்து அதற்கு செவ்வாய் என்று பெயரிட்டார்கள்.
நாசா விஞ்ஞானிகள் முதல் மற்ற நாடுகளின் விஞ்ஞானிகளும் அனைவரும் செவ்வாயை ஆய்வு செய்து சொல்வது எவ்வாறு உள்ளதென்றால், ஆரஞ்சு பழத்தின் தோலை மட்டும் பார்த்து விட்டு அதைப்பற்றிக் கூறுவதாகத்தான் உள்ளது. ஆனால் பழத்திற்குள் உள்ள சுலைகள், சுவை, விதை இவற்றை எல்லாம் இன்னமும் அவர்கள் எட்டவில்லை.
முன்னர் சித்தர்கள் ஞானத்தினால் கண்டறிந்ததை பல கோடி ரூபாய் செலவு செய்து பல வருடங்கள் ஆய்வு செய்து அவர்கள் சொன்னதுதான் சரி என்று
சொல்லக்கூடிய அளவில்தான் அதி நவீன விஞ்ஞானம் இன்று வரை உள்ளது.
பண்டய ஞானத்தின் தொகுப்புக்களாக உள்ள நமது ஓலைச் சுவடிகளை வைத்துக் கொண்டுதான் பல நாடுகளிலும் ஆய்வு செய்கின்றார்களாம். பழைய வான சாஸ்திர நூல்கள் உள்ளிட்ட மற்றவைகளை பல நாட்டினரும் ரகசியமாக பயன்படுத்தித்தான் ஆய்வு செய்கின்றனர்.
மகாபாரதம், ராமாயணத்திலும் ஏற்பட்ட பிரச்சனைகளை சமாளிக்க என்ன யுக்திகள் கையாளப்பட்டதோ அவைகளின் அடிப்படையில் இன்றுள்ள எம்.பி.ஏ. ஆளுமைக் கல்வி, எச்.ஆர். எனும் மனித மேம்பாட்டுக் கல்வி ஆகியவற்றில் பாடம் புகட்டப்படுவதாக கேள்விப்படுகிறோம்.
இன்றைய அறிவியல் ஆய்வுகளிலும் நமது முன்னோர்கள் கண்டு கூறியதை அடிப்படையாகக் கொண்டு பல துறைகளிலும் நடந்து வருகிறது.
செவ்வாயைப் போலவே புதன் கிரகத்தை எடுத்துக்கொள்ளுங்கள். இன்றைக்கு அறிவியல் அந்த கிரகத்தைப் பற்றி என்ன கூறுகிறதோ அதே தன்மையை நமது முன்னோர்களும் நன்கு அறிந்திருப்பதைக் காணலாம்.
பாதரசம் (மெர்க்குரி) எதனுடனும் ஒட்டாது. அதுபோலவே புதனும். புதனை அலி கிரகம் என்று கூறுவோம். ஏனென்றால் அது ஆணும் இல்லை, பெண்ணும் இல்லை. புதன் எந்த கிரகத்தோடு சேர்கிறதோ அந்த கிரகத்தின் தன்மையைப் பெறும்.
இப்படி ஒவ்வொரு கிரகத்தைப் பற்றி மட்டுமின்றி, அதன் தன்மைகளையும் அறிந்து, அதனடிப்படையில் ஜோதிடம் எனும் வழிகாட்டி சாஸ்த்திரத்தை நமது முன்னோர்கள் நமக்கு அளித்துள்ளனர்.
Webdunia
Publish Date: Tue, 11 Dec 2007 (17:10 IST)
Updated Date: Tue, 11 Dec 2007 (17:10 IST)