Publish Date: Wed, 24 Jan 2018 (16:43 IST)
Updated Date: Wed, 24 Jan 2018 (16:47 IST)
தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு விஜயேந்திரார் எழுந்து நிற்காதது குறித்து கேள்வி எழுப்பிய போது, மக்களவை துணை சபாநாயகர் தம்பித்துரை பதில் சொல்லாமல் தெறித்து ஓடும் வீடியோ வெளியாகியுள்ளது.
சென்னையில் பேராசிரியர் ஹரிஹரன் எழுதிய தமிழ்-சமஸ்கிருதம் அகராதி நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கலந்து கொண்டு, நூலை வெளியிட்டார். அவருடன் காஞ்சி இளைய மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியின் தொடக்கமாக தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. அப்போது விஜயேந்திரர் மட்டும் எழாமல், தனது இருக்கையில் உட்கார்ந்திருந்தார். விழா நிறைவடையும் போது, தேசிய கீதம் இசைக்கும் போது எழுந்து நின்றார். இந்த செயல் அங்கிருந்தவர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
இது தமிழுக்கு செய்த அவமரியாதை என்றும், அதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தமிழ் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில் கரூரில் ஒரு அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மக்களவை துணை சபாநாயகர் தம்பித்துரையிடம், விஜயேந்திரர் குறித்து கேள்வி எழுப்பிய போது, கருத்து தெரிவிக்காமல், அதை அவரிடமே கேளுங்கள் என அலட்சியமாக பதில் சொல்லி விட்டு சென்றார்.
இந்த சம்பவம் தமிழ் உணர்வாளர்களையும், தமிழர்களையும் ஒட்டு மொத்தமாக அவமானப்படுத்துவதாக இருந்ததாக நடுநிலையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதுபற்றி கேள்வி எழுப்பிய போது, தமிழிசை சவுந்தரராஜன், இதுபற்றி தனக்கு தெரியாது என பதிலளித்தது குறிப்பிடத்தக்கது.