Publish Date: Mon, 29 Mar 2021 (10:59 IST)
Updated Date: Mon, 29 Mar 2021 (11:01 IST)
தமிழகத்தில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்தால் அத்தியாவசியமற்ற பணிகளுக்கு மெல்ல மெல்ல கட்டுப்பாடுகள் அறிவிக்கப்படும் என சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் “தமிழகத்தில் சென்னை, கோயம்புத்தூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. மத்திய அரசு கொரோனா பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளாக அறிவித்த மாவட்டங்களில் இந்த மூன்று மாவட்டங்களும் உள்ளன” என தெரிவித்துள்ளார்.
மேலும் “தமிழகத்தில் கடந்த ஆண்டில் கொரோனாவுக்கு தடுப்பூசிகள் இல்லாததால் முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனால் தற்போதைய சூழலில் மக்கள் மாஸ்க் அணிவது உள்ளிட்ட அத்தியாவசிய நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். தமிழகத்தில் கொரோனா அதிகரித்தால் அத்தியாவசியமற்ற பணிகளுக்கு மெல்ல மெல்ல கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்” என அவர் தெரிவித்துள்ளார்.