Publish Date: Tue, 01 Dec 2020 (09:40 IST)
Updated Date: Tue, 01 Dec 2020 (09:43 IST)
பாமகவின் 20% இடஒதுக்கீடு போராட்டம்:
தேர்தல் நெருங்கி விட்டாலே அரசியல் கட்சிகள் கூட்டணி கட்சிகளிடம் அதிக தொகுதிகள் பெறவும், தங்கள் செல்வாக்கை நிரூபிக்கவும் திடீரென போராட்டங்கள் நடத்துவது வழக்கமான ஒன்றாகும். அந்த வகையில் தற்போது வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கை விடுத்து திடீரென பாமகவினர் போராட்டம் நடத்துவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
இந்த போராட்டம் காரணமாக சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பயணிகள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். பேருந்துகள் மட்டுமின்றி ரயில்களையும் பாமகவினர் தடுத்து நிறுத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பேருந்து, ரயில் மறியல் காரணமாக போக்குவரத்து கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இதனையடுத்து போலீசார் குவிக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன
பேருந்துகள், ரயில் மட்டுமின்றி சென்னையில் மின்சார ரயில்களையும் மறித்து பாமகவினர் போராட்டம் நடத்துவதால் அலுவலகம் செல்லும் ஆயிரக்கணக்கானோர் தற்போது பெரும் சிக்கலில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது