Publish Date: Wed, 13 Aug 2025 (07:42 IST)
Updated Date: Wed, 13 Aug 2025 (07:54 IST)
ராமேஸ்வரத்தில் உள்ள பாம்பன் பாலத்தின் தூக்கு பகுதியில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், ரயில் பயணிகள் பல மணி நேரம் கடும் அவதிக்குள்ளாகினர்.
சமீபத்தில் ரூ.550 கோடி செலவில் கட்டப்பட்ட புதிய பாம்பன் பாலத்தை பிரதமர் மோடி ஏப்ரல் 6-ஆம் தேதி திறந்துவைத்தார். நேற்று தூக்கு பாலம் மேலே தூக்கப்பட்டு, மீண்டும் கீழே இறக்கப்பட்டபோது தண்டவாள பகுதிகள் சரியாக இணையவில்லை. இது, ரயில் போக்குவரத்து தடைபடுவதற்கு முக்கிய காரணமாக அமைந்தது.
இந்தக் கோளாறின் காரணமாக, மதுரையிலிருந்து ராமேஸ்வரம் வந்த ரயில் மண்டபத்திலும், ராமேஸ்வரத்திலிருந்து மதுரை நோக்கிச் சென்ற ரயில் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதனால், நூற்றுக்கணக்கான பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.
எனினும், பொறியாளர்கள் உடனடியாக பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 5 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு, தண்டவாளங்கள் சரிசெய்யப்பட்டு, ரயில் சேவை மீண்டும் தொடங்கியது. இதனால் பயணிகள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.