Publish Date: Tue, 23 Mar 2021 (13:31 IST)
Updated Date: Tue, 23 Mar 2021 (15:06 IST)
ராயபுரத்தில் மேலதாளம் முழுங்க தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அமைச்சர் ஜெயகுமாருக்கு பொதுமக்களும், தொண்டர்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
சென்னை ராயபுரம் தொகுதிக்குட்பட்ட சீனிவாசபுரம், போஜராஜன் ஆகிய பகுதிகளில் அதிமுக வேட்பாளர் அமைச்சர் ஜெயகுமார் ரிக்ஷாவில் சென்றும், வீடு வீடாக நடந்து சென்றும் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். மேலதாளம் முழங்க, தொண்டர்கள் நடனமாடி அங்கு தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டனர். மேலும் அமைச்சருக்கு ஆரத்தி எடுத்தும், மலர்கள் தூவியும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, தற்போது வரும் கருத்துகணிப்புகள் அனைத்தும் திமுகவின் குறுக்குவழியில் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் கருத்து கணிப்பு எடுக்கும் நிறுவனங்களுக்கு பணம் கொடுத்து முடிவுகள் வெளியிடப்படுகின்றன. இது எந்த வகையிலும் அதிமுகவின் வெற்றியை பாதிக்காது.
திமுகவின் நேற்றைய கூட்டமும், அங்கு பேசிய ஸ்டாலினின் பேச்சும் என்னுடைய வெற்றிக்கு வழிவகுத்து கொடுத்துள்ளது. ராயபுரம் தொகுதியில் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவராலும் அறியப்பட்டவன் நான். என் மீது இருக்கும் பயத்தினால் தான் ஸ்டாலின் உட்பட 9 திமுக வேட்பாளர்களின் அறிமுக கூட்டம் ராயபுரத்தில் நடத்தப்பட்டது.
ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அமைச்சர்களின் கார் மீதான தாக்குதல்களுக்கு திமுகவினரே மூலகாரணம். பிரச்சாரத்தின்போதே அவர்களுடைய வேலையை காட்ட தொடங்கி விட்டனர் என அவர் தெரிவித்தார்.
பிரச்சாரத்தின் நடுவே போஜராஜன் நகரில் உள்ள டீக்கடையில் டீ குடித்துவிட்டு பிரச்சாரத்தை தொடர்ந்து அமைச்சர் ஜெயகுமார் மேற்கொண்டார். இதில் பாஜக சட்டமன்ற தேர்தல் பொறுப்பாளர் வன்னியராஜ் மற்றும் அதிமுகவினரும், கூட்டணி கட்சிகளை சேர்ந்த பலரும் கலந்து கொண்டனர்.
Sugapriya Prakash
Publish Date: Tue, 23 Mar 2021 (13:31 IST)
Updated Date: Tue, 23 Mar 2021 (15:06 IST)