Publish Date: Wed, 07 Mar 2018 (10:03 IST)
Updated Date: Wed, 07 Mar 2018 (10:14 IST)
திருப்பத்தூரில் உள்ள தந்தை பெரியார் சிலையை பாஜக பிரமுகர்கள் உடைத்த விவகாரம் தமிழகத்தில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா நேற்று திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்டதை ஒப்பிட்டு தமிழகத்திலும் பெரியார் சிலைகள் அகற்றப்படும் என சர்ச்சைக்குரிய ஒரு பதிவை பதிவு செய்திருந்தார். இந்த பதிவுக்கு கடும் கண்டங்கள் எழவே, அந்த பதிவை அவர் சிலமணி நேரங்களில் நீக்கிவிட்டார்.
அந்நிலையில், வேலூர் மாவட்டம்திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே இருந்த தந்தை பெரியார் சிலையை இந்துத்துவா அமைப்பு மற்றும் பாஜகவை சேர்ந்த சிலர் உடைத்தனர். அதைக் கண்டு கொதித்தெழுந்த பொதுமக்கள் சிலர் அவர்களில் 4 பேரைப் பிடித்து தர்ம அடி கொடுத்தனர். அதன் பின் அந்த 4 பேர் மீதும் போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த சம்பவம் திருப்பத்தூர் மட்டுமில்லாமல், தமிழகமெங்கும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. அதோடு, ஈரோட்டில் தந்தை பெரியார் மாளிகைக்கும் சிலைக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது.
திருப்பத்தூரில் பெரியால் நிலை உடைக்கப்பட்டதற்கு தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். அதேபோல், சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் கொந்தளிப்பான கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில், ஹெச்.ராஜா தனது முகநூல் பக்கத்தில் “ஈவேரா சிலைகளும் அகற்றப்படும் என்ற பதிவு முகநூல் அட்மின் என் அனுமதி இன்றி பதித்துள்ளார்” என விளக்கம் அளித்துள்ளார்.