கட்சி மாறி வாக்களித்த எம்.பி.க்கள் மீது நடவடிக்கை: பா.ஜ.க.!
Publish Date: Wed, 23 Jul 2008 (16:25 IST)
Updated Date: Wed, 23 Jul 2008 (16:25 IST)
மக்களவையில் நேற்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின்போது மன்மோகன் சிங் அரசிற்கு ஆதரவாகக் கட்சி மாறி வாக்களித்த எம்.பி.க்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாரதிய ஜனதா கட்சி அறிவித்துள்ளது.
பிரதமர் மன்மோகன் சிங் கொண்டுவந்த நம்பிக்கை தீர்மானத்திற்கு ஆதரவாக 7 பா.ஜ.க. எம்.பி.க்கள் வாக்களித்துள்ளனர். சோம்பாய் பட்டேல், பாபுபாய் கடாரா, பிரிஜ்புசன் சரண்சிங் ஆகிய அரசிற்கு ஆதரவாக வாக்களித்துள்ள பா.ஜ.க. எம்.பி.க்களில் மூவர் ஆவர். ஹரிபாபு ரத்தோட் என்ற எம்.பி. வாக்கெடுப்பை புறக்கணித்துள்ளார். மேலும் 3 பா.ஜ.க. எம்.பி.க்கள் மக்களவையில் வாக்கெடுப்பிற்கான மணி ஒலித்தபோது, நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள கடையில் டீ குடித்துக்கொண்டு இருந்துள்ளனர். நம்பிக்கை வாக்கடுப்பில் மத்திய அரசிற்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்று கட்சித் தலைமை பிறப்பித்த உத்தரவை மீறி, ஒழங்கீனமாக நடந்துகொண்ட எம்.பி.க்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அவர்கள் கட்சியை விட்டு நீக்கப்படுவார்கள் என்றும் பா.ஜ.க. வட்டாரங்கள் கூறியுள்ளன. "
எங்கள் எம்.பி.க்கள் கட்சி மாறி வாக்களித்துள்ளனர் என்பதை அறிந்து நாங்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளோம்" என்று பெயர் வெளியிடக் கூடாது என்ற நிபந்தனையுடன் பா.ஜ.க. மூத்த தலைவர் ஒருவர் கூறியுள்ளார்.பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி ஒரு தாழ்த்தப்பட்ட பெண் என்பதால், அவர் பிரதமர் பதவிக்கு முன்னிறுத்தப்படுவதை தடுப்பதற்காக, மத்திய அரசைப் பா.ஜ.க. காப்பாற்றியுள்ளது என்று கூறப்படும் செய்திகளையும் பா.ஜ.க. வட்டாரங்கள் வன்மையாக மறுத்துள்ளன. நமது நாட்டின் ஜனநாயக நலன்களுக்கு கேடு விளைவித்துள்ள ஐ.மு.கூ. அரசிற்கு எதிராக நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்தவும் பா.ஜ.க. திட்டமிட்டுள்ளது.தெலுங்கு தேசம், பிஜூ ஜனதா தளம் எம்.பி.க்கள் மீது நடவடிக்கை!