Publish Date: Tue, 13 Apr 2021 (08:42 IST)
Updated Date: Tue, 13 Apr 2021 (08:44 IST)
கடந்த 2019ம் ஆண்டில் உலகம் முழுவதும் பரவிய கொரோனா அடுத்தடுத்து வீரியமடைந்து வரும் நிலையில் கொரோனா முடிவுக்கு வர ஆகும் காலம் குறித்து உலக சுகாதார அமைப்பு கணிப்பை வெளியிட்டுள்ளது.
கடந்த 2019ம் ஆண்டு இறுதியில் பரவ தொடங்கிய கொரோனா உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களை பாதித்துள்ளது. மேலும் கோடிக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கொரோனா பாதிப்புகள் ஒவ்வொரு நாட்டிலும் வீரியமடைந்து மீண்டும் பரவி வருகிறது.
இதுகுறித்து சுவிட்சர்லாந்தில் செய்தியாளர்களிடம் பேசிய உலக சுகாதார அமைப்பின் டெட்ராஸ் அதானம் “உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. பல நாடுகளில் தொற்று எண்ணிக்கை அதிகரித்தாலும் மக்கள் அலட்சியமாக உள்ளனர். இளைஞர்கள் தங்களுக்கு கொரோனா வராது என நம்புகின்றனர். மக்கள் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர முடியும்” என கூறியுள்ளார்.
மேலும் சமீபத்திய தடுப்பூசிகள், மருந்துகள் மற்றும் மக்கள் ஒத்துழைப்பு நல்குதல் போன்றவை தொடர்ந்தாலும் உலகில் கொரோனா பரவலை முடிவுக்கு கொண்டு வர பல ஆண்டுகாலம் ஆகலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.